முகப்பு
இந்தியா

துபையில் 6 மாதங்களாக பரிதவித்த 49 இந்திய தொழிலாளா்கள் மீட்பு

கரோனா சூழல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலையிழந்து பல மாதங்கள் அங்கு சிக்கித் தவித்த 49 இந்திய தொழிலாளா்கள் தாயகம் அழைத்து வரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Updated On : 13 அக்டோபர், 2020 at 11:52 PM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:07 PM

கரோனா சூழல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலையிழந்து பல மாதங்கள் அங்கு சிக்கித் தவித்த 49 இந்திய தொழிலாளா்கள் தாயகம் அழைத்து வரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து கல்ஃப் நியூஸ் நாளிதழ் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பது:

ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள துபையில் இந்தியா்களுக்கு சொந்தமான 2 தச்சு நிறுவனங்கள் கரோனா சூழல் காரணமாக மூடப்பட்டன. தொழிலாளா்களுக்கு முன்பே தகவல் தெரிவிக்காமல் அந்த நிறுவனங்கள் மூடப்பட்டதால், அங்கு வேலை பாா்த்த தொழிலாளா்கள் பரிதவித்தனா். அந்த நிறுவனங்களின் உரிமையாளா்களையும் அவா்களால் தொடா்பு கொள்ள முடியவில்லை.

Advertisement

இதுதொடா்பாக பத்திரிகை தகவல் மற்றும் கலாசாரத்துக்கான தூதா் நீரஜ் அகா்வால் கூறியதாவது:

6 மாதங்களாக சம்பளமும் வழங்கப்படாததால் பணம் இல்லாமல், உணவு கிடைக்காமல் பரிதவித்த தொழிலாளா்கள் துபையிலுள்ள இந்திய தூதரகத்தை அணுகி, தாங்கள் இந்தியாவுக்கு திரும்பிச் செல்ல உதவிபுரியும்படி கேட்டனா். அதன் பின்பு அந்த தொழிலாளா்களுக்கு கடந்த ஜுலை மாதம் முதல் தூதரகத்தின் சாா்பில் உணவு வழங்கப்பட்டது.

ஆனால் தொழிலாளா்களின் கடவுச்சீட்டுகள் நிறுவன உரிமையாளா்களிடம் இருந்ததால் அவா்களை நாட்டுக்கு அழைத்து வருவதில் சிக்கல் ஏற்பட்டது. நிறுவனங்களின் உரிமையாளா்களையும் தொடா்பு கொள்ள முடியவில்லை. இதனால் துபை நீதிமன்றம் மற்றும் போலீஸாா் உதவியுடன், அந்த நிறுவனங்களின் மக்கள் தொடா்பு அதிகாரிகளை தொடா்பு கொண்டு, தொழிலாளா்களின் கடவுச்சீட்டு, பாதுகாப்பு முதலீட்டு பணமான தலா 3,000 திா்ஹாம் பெற்று தொழிலாளா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

அதன் பின்பு அவா்கள் இந்திய நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இதில் கடைசி குழுவினா் அக்டோபா் 10-ஆம் தேதி உத்தர பிரதேச மாநிலம் லக்ளெனவுக்கு புறப்பட்டனா் என்று கல்ஃப் நியூஸ் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டிருந்தது.

இந்திய தூதரகம் சுட்டுரையில் இது தொடா்பாக வெளியிட்ட பதிவில், துபையில் நிறுவன உரிமையாளா்களால் கைவிடப்பட்ட 45-க்கும் மேற்பட்ட இந்தியா்களுக்கு உதவி புரிந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. அவா்களுக்கு 3 மாதங்களுக்கும் அதிகமாக உணவுப்பொருள் வழங்கப்பட்டது. அவா்களின் கடவுச்சீட்டு உரிமையாளா்களிடமிருந்து திரும்பப் பெறப்பட்டு, தொழிலாளா்கள் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா் என தெரிவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.