ஜன நாயகன் விவகாரம்: தணிக்கை வாரியம் விளக்கம்!
ஜன நாயகன் திரைப்படம் இணையத்தில் கசிந்தது தொடர்பாக தணிக்கை வாரியம் விளக்கம்.
நடிகர் விஜய் நடித்துள்ள ஜன நாயகன் திரைப்படம் இணையத்தில் கசிந்தது தொடர்பாக மத்திய தணிக்கை வாரியம் விளக்கமளித்துள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில் வினோத் இயக்கிய திரைப்படம் ஜன நாயகன். இப்படத்தில் மமிதா பைஜூ, பூஜா ஹெக்டே, பாபி தியோல், கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், நரேன், பிரியாமணி ஆகியோர் நடித்துள்ளனர்.
இவ்வாண்டு ஜனவரி 9 ஆம் தேதி பொங்கலையொட்டி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட இந்தப் படத்தில் சில காட்சிகள் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்காமல் பட வெளியீட்டை நிறுத்திவைத்தது.
Advertisement
இதனைத் தொடர்ந்து, நடைபெற்ற வழக்கு விசாரணைகளில் இப்படத்தை மறுதணிக்கை செய்ய நீதிமன்றம் உத்தரவு அளித்தது. இதனால், ஜன நாயகன் வெளியீட்டில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டதுடன் வணிக ரீதியாக சில பின்னடைவுகளும் ஏற்பட்டன.
படத்தை வெளியிட படக்குழுவினர் தொடர்ந்து முயற்சி எடுத்துவந்த நிலையில் படத்தில் அரசியல் தொடர்பான காட்சிகள் இடம்பெற்றுள்ளதால் தேர்தல் நடத்தை விதிமுறைகளைக் காரணம் காட்டி இப்படத்தின் வெளியீடு தள்ளிப்போனது.
எனவே, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவடைந்தவுடன் மே இரண்டாவது வாரத்தில் ஜன நாயகன் படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஏப்ரல் 9 அன்று மாலை ஜன நாயகன் திரைப்படத்தின் சில காட்சிகள் இணையத்தில் சட்டவிரோதமாக மர்ம நபர்களால் வெளியிடப்பட்டது.
தொடர்ந்து, ஏப்ரல் 10 அதிகாலை ஜன நாயகன் முழு திரைப்படமும் ஹெச்டி தரத்தில் இணையத்தில் வெளியாகியதால் படக்குழுவினரும் ரசிகர்களும் பேரதிர்ச்சிக்கு உள்ளாகினர்.
ஜன நாயகன் திரைப்படம் இவ்வாறு இணையத்தில் கசிந்தது தொடர்பாக திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்னரே கசிந்ததால் இதில் தணிக்கை வாரியத்திற்கு தொடர்பு இருக்கும் என ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், தணிக்கை வாரியம் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளது. அதில், "மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின் மூலம் ஜனநாயகன் படம் இணையத்தில் வெளியானதாகக் கூறப்படுவது ஆதாரமற்ற தவறான குற்றச்சாட்டு.
தணிக்கை சான்றிதழுக்காக சமர்ப்பிக்கப்படும் அனைத்து படங்களுக்கும் பாதுகாப்பான கேடிஎம் (Key Delivery Message) என்னும் முறையை தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது. சமர்பிக்கப்படும் படங்களுக்கு தனிப்பட்ட பாஸ்வேர்டு அளிக்கப்பட்டு அது முழுமையாக தயாரிப்பாளர் / இயக்குநர் வசம் இருக்கும்.
முறையான கேடிஎம் இன்றி அந்தப் படத்தை பார்க்க முடியாது. ஜனநாயகன் படத்தின் டிஜிட்டல் சினிமா பேக்கேஜ் மார்ச் 17 அன்று உரிய ஒப்புதலுடன் விண்ணப்பதாரரிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது முதல் இது அவர்களிடமே இருக்கிறது" என்று தெரிவித்துள்ளனர்.