கேரள மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து கேரள காங்கிரஸ்(எம்) கட்சியினர் விலகி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணியில் சேர விருப்பம் தெரிவித்துள்ளது அரசியல் அரங்கில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
கேரள மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக கூட்டணி ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகித்துள்ள கேரள காங்கிரஸ்(எம்) கட்சி அக்கூட்டணியில் இருந்து வெளியேறும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக புதன்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் தலைவர் ஜோஸ் கே மணி, “கேரளத்தில் இடதுசாரி கூட்டணியில் இணைய விருப்பமாக உள்ளோம். மாநிலத்தில் அனைத்துதரப்பினரின் முன்னேற்றத்துக்கும் முதல்வர் பினராய் விஜயன் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இடது அரசின் மதச்சார்பின்மையை காக்க மேற்கொள்ளும் நடவடிக்கைகள் எங்களை ஈர்த்துள்ளது.” எனத் தெரிவித்தார்.
கேரள காங்கிரஸ்(எம்) கட்சியின் முடிவை துரோகம் என ஐக்கிய ஜனநாயக முன்னணி விமர்சித்துள்ளது.
ஜோஸ் கே மணியின் இந்த அறிவிப்பிற்கு முதல்வர் பினராய் விஜயன் வரவேற்பு தெரிவித்துள்ளார். தொடர்ந்து ஜோஸ் கே மணி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியின் ஆதரவுடன் வென்ற மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கேரள சட்டப்பேரவைத் தேர்தலுக்கு 6 மாதங்களே உள்ள நிலையில் காங்கிரஸ் கூட்டணியில் 38 ஆண்டுகளாக அங்கம் வகித்து வந்த கேரள காங்கிரஸ்(எம்) கட்சி வெளியேறி உள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.