வேளாண் சட்டங்கள்: விவசாயிகளின் கூட்டத்தை புறக்கணித்த அமைச்சர்கள்
பஞ்சாபில் வேளாண் சட்டங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்வதற்காக விவசாயிகள் ஏற்பாடு செய்திருந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் யாரும் பங்கேற்காததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
பஞ்சாபில் வேளாண் சட்டங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்வதற்காக விவசாயிகள் ஏற்பாடு செய்திருந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் யாரும் பங்கேற்காததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களுக்கும் சட்டமாக நிறைவேற்றப்பட்டன.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், ஹரியாணா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதனிடையே வேளாண் சட்டத்தில் உள்ள நிறை குறைகள் குறித்து ஆலோசிப்பதற்காகவும், விவசாயிகள் தரப்பிலான கோரிக்கைகளை முன்வைப்பதற்காகவும் ஆலோசனைக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
விவசாயிகள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கூட்டத்தில் மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மற்றும் மாநில வேளாண் துறை அமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்கவில்லை.
அரசு உயர் அதிகாரிகளும் விவசாயிகளின் கூட்டத்தில் பங்கேற்காமல் போனதால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். கிரிஷ் பவன் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கூட்டத்தில் 30 அமைப்பை சேர்ந்த விவசாயிகள் மட்டுமே கலந்துகொண்டனர். ஆலோசனையின் முடிவில் புதிய வேளாண் சட்ட நகல் கிழித்து வீசப்பட்டன.
விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடுவதை தவிர்க்கும் வகையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். இது குறித்து பேசிய விவசாயிகள், வேளாண் சட்டங்கள் குறித்து விவசாயிகளின் குறைகளை கேட்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் அமைச்சர்கள் ஏன் பங்கேற்கவில்லை?. அமைச்சர்கள் ஏன் விவசாயிகளை சந்திக்க மறுக்கின்றனர். அரசு ஏன் வேளாண் சட்ட விவகாரத்தில் இரட்டை வேடம் போடுகிறது என்று விவசாயிகள் கேள்வி எழுப்பினர்.