வேளாண் சட்டத்திற்கு ஆதரவாக நடைபெற்ற பேரணியில் விவசாயி பலி
ஹரியாணாவில் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக நடைபெற்ற டிராக்டர் பேரணியில் 72 வயது மூத்த விவசாயி உயிரிழந்த நிகழ்வு குறித்து காவல்துறையினர் விசாரணை
ஹரியாணாவில் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக நடைபெற்ற டிராக்டர் பேரணியில் 72 வயது மூத்த விவசாயி உயிரிழந்த நிகழ்வு குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
புதிய வேளாண் சட்டத்திற்கு ஆதரவாக ஹரியாணாவில் பாஜகவினரால் டிராக்டர் பேரணி நடத்தப்பட்டது. இதில் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டு பேரணியாகச் சென்றனர்.
இதனிடையே இதில் பங்கேற்ற 72 வயது மூத்த விவசாயியான பாரத் சிங் பேரணியின்போதே உயிரிழந்தார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் விவசாயியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது மகன் தெரிவித்துள்ளார். வேளாண் சட்டத்திற்கு ஆதரவாக நடைபெற்ற பேரணியில், வேளாண் சட்டத்திற்கு எதிரானவர்கள் கலந்துகொண்டு கலவரத்தில் ஈடுபட்டதில் தமது தந்தை உயிரிழந்ததாக அவர் குற்றம் சாட்டினார்.
மேலும் இது குறித்து பாஜக மாவட்டத் தலைவர் ராஜேஷ் பதுரா தெரிவித்துள்ளதாவது, வேளாண் சட்டத்திற்கு ஆதரவாக இந்த பேரணி நடத்தப்பட்டது. எனினும் இதில் காங்கிரஸ் கட்சியினர் குறுக்கிட்டு டிராக்டர் மீது கற்களை வீசி விவசாயிகளை கொல்ல முயற்சித்தனர். டிராக்டரை இயக்கி வந்த விவசாயிகளை கீழே தள்ள முயற்சித்தனர் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வரும் பாரதிய கிசான் குழுவை சேர்ந்த விவசாயிகளே, மூத்த விவசாயியின் மரணத்திற்கு காரணம் என்றும், விவசாயியின் மரணம் கொலை என்றும் பாஜக மக்களவை உறுப்பினர் நயாப் சைனி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.