தில்லி விவசாயக் கூட்டத்தை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற 70 விவசாயிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.
மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களுக்கும் சட்டமாக நிறைவேற்றப்பட்டன.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், ஹரியாணா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதனிடையே வேளாண் சட்டத்தில் உள்ள நிறை குறைகள் குறித்து ஆலோசிப்பதற்காகவும், விவசாயிகள் தரப்பிலான கோரிக்கைகளை முன்வைப்பதற்காகவும் நேற்று (புதன்கிழமை) ஆலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
வேளாண் சட்டம் குறித்து விவசாயிகள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், மாநில வேளாண் துறை அமைச்சர் உள்பட உயர் அதிகாரிகள் யாரும் பங்கேற்காத நிலை ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்த நிலையில் தில்லியில் உள்ள கிரிஷ் பவன் என்னும் விவசாயக் கட்டட வளாகத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்று போராட்டத்தில் ஈடுபட முயன்ற விவசாயிகளை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
இன்றும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட விவசாயிகள் நண்பகலில் போராட்டத்தில் ஈடுபட முயன்றபோது காவல்துறையினர் தடுத்து நிறுத்தி 70 விவசாயிகளை கைது செய்து அழைத்துச் சென்றனர்.