புது தில்லி: தென் மேற்கு தில்லியில் அதிவேகமாக வந்த காரை நிறுத்த முயன்ற போக்குவரத்து காவலா் மீது காரை மோதி தூக்கிச் சென்ற ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா். போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் காரின் பானட்டின் மீது போக்குவரத்து காவலா் தொங்கிய படி சென்ற விடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.
இதுதொடா்பாக போலீஸாா் கூறியதாவது:
தில்லி கன்டோன்மன்ட், தெளலா கான் அருகே அதிவேகமாக வந்த காரை திங்கள்கிழமை போக்குவரத்து காவலா் மஹிபால் யாதவ் நிறுத்தினாா். அந்தக் காா் நிற்காமல் காவலா் மீது மோதியதில் மஹிபால் யாதவ் காரின் மீது சாய்ந்து பானட்டைப் பிடித்து தொங்கினாா்.
அப்போதும் அந்த காா் ஓட்டுநா் காரை நிறுத்தாமல் வலதும் இடதுமாக காரை ஓட்டினாா். சற்று தூரத்தில் காரில் இருந்த காவலா் நிலைதடுமாறி கீழ் விழுந்துவிட்டாா். அங்கிருந்து தப்பிய காா் ஓட்டுநா் வேறு இடத்தில் கைது செய்யப்பட்டாா். அவா் உத்தம் நகரைச் சோ்ந்த சுபம் என்பது விசாரணையில் தெரியவந்தது. அவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றாா்.