பிகார் தேர்தல் களத்தில் தாதாக்களின் மனைவிகள்
பிகார் மாநில தேர்தல், போட்டியிட முடியாத தாதாக்களின் சார்பாக களம் கண்டிருக்கும் மனைவிகளால் நிரம்பியிருக்கிறது. சுமார் 10 தாதாக்களின் மனைவிகள் இந்த தேர்தலில் போட்டியிடுகிறார்கள்.
பாட்னா: பிகார் மாநில தேர்தல், போட்டியிட முடியாத தாதாக்களின் சார்பாக களம் கண்டிருக்கும் மனைவிகளால் நிரம்பியிருக்கிறது. சுமார் 10 தாதாக்களின் மனைவிகள் இந்த தேர்தலில் போட்டியிடுகிறார்கள்.
பல்வேறு அரசியல் கட்சிகளின் சார்பில் வெவ்வேறு தொகுதிகளில் இந்த 10 மனைவிகளும் களம்கண்டுள்ளனர். இவர்களது கணவர்கள் ஒன்று சிறையிலோ அல்லது சிறை சென்று பிணையில் விடுதலையாகியுள்ளனர்.
ராஷ்ட்ரிய ஜனதா தளம் தரப்பில் விபா தேவிக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இவர் ராஜ் வல்லப் யாதவின் மனைவியாவார். வல்லப் யாதவ் பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே தனது கணவரின் சார்பாக நவாடா மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தவர்.
இதே கட்சியில் எம்எல்ஏ அருண் யாதவின் மனைவி கிரண் தேவிக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. எம்எல்ஏ அருண் யாதவ் பலாத்கார வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு தலைமறைவாக இருக்கிறார்.
வீணா சிங், வைஷாலி தொகுதியின் முன்னாள் எம்.பி. ராம கிஷோர் சிங்கின் மனைவி தேர்தலில் போட்டியிடுகிறார்.
பிமா பாரதி, ஐக்கிய ஜனதா தள எம்எல்ஏவும், அவதேஷ் மண்டலின் மனைவியுமாவார். மண்டல் மீது ஒரு டஜனுக்கும் மேலான குற்ற வழக்குகள் உள்ளன.
சீதா தேவி, ஐக்கிய ஜனதா தளத்தின் ஏகம் தொகுதி வேட்பாளரான இவர் தாதா மனோரஞ்சன் சிங் துமாலின் மனைவி. இதே கட்சியில் மறைந்த பூடான் சிங்கின் மனைவி லேஸி சிங், ரன்வீர் யாதவின் மனைவியும் காக்ரி தொகுதி எம்எல்ஏவுமான பூணம் யாதவ் ஆகியோரும் தேர்தலில் களம் கண்டுள்ளனர்.
பிண்டி யாதவின் மனைவி மனோரமா தேவி, ஆகிலேஷ் சிங்கின் மனைவி அருணா தேவி ஆகியோரும், சட்ட விதிகளால் தேர்தலில் போட்டியிட முடியாத தங்களது கணவர்களின் சார்பாக தேர்தலில் களமிறக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுடன் 1994ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ள ஆனந்த் மோகனின் மனைவி லவ்லி ஆனந்த் ராஷ்ட்ரிய ஜனதா தளம் சார்பில் போட்டியிடுகிறார்.