முகப்பு
இந்தியா

2ஜி: மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்ய சிபிஐக்கு உரிமை இல்லை: எதிர்த்தரப்பில் வாதம்

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்வதற்கு அசைக்க முடியாத உரிமை இல்லை என்று எதிர்த்தரப்பில் வாதிடப்பட்டது.

Updated On : 21 அக்டோபர், 2020 at 3:28 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:11 PM

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்வதற்கு அசைக்க முடியாத உரிமை இல்லை என்று எதிர்த்தரப்பில் வாதிடப்பட்டது.
2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்பி கனிமொழி உள்ளிட்ட 17 பேர் விடுவிக்கப்பட்டதற்கு எதிரான மேல் முறையீட்டு வழக்கு விசாரணை அக்டோபர் 5 முதல் தில்லி உயர்நீதிமன்றத்தில் தினம்தோறும் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை விரைந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு சிபிஐ, அமலாக்கத் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது உயர்நீதிமன்ற ஒரு நபர் நீதிபதி பிரிஜேஷ் சேதி அமர்வு விசாரித்து வருகிறது. இந்த மனு மீது அரசுத் தரப்பிலும், எதிர்த் தரப்பினர் தரப்பிலும் தொடர்ந்து வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், உயர்நீதிமன்ற நீதிபதி பிரிஜேஷ் சேதி முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது எதிர்த்தரப்பினர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் சித்தார்த் லூத்ரா முன்வைத்த வாதம்:
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டுவிட்டனர். இந்த நிலையில், சிபிஐ தரப்பில் மேல்முறையீட்டு மனுவை அனுமதிக்குமாறு கோரப்பட்டுள்ளது.  
சட்டப்பூர்வமாக சிபிஐ, அமலாக்கத்துறைக்கு மேல்முறையீடு செய்ய உரிமை உள்ளதா? இதற்கு இல்லை என்பதுதான் என் பதில். மேலும், மேல்முறையீடு உரிமை சட்டத்தால் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றார். ஊழல் தடுப்புச் சட்டத்தில் 2018-ல் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்திற்கு முன்பு அரசு ஊழியரின் நடத்தை தண்டனைக்குரியதாக இருந்தது. ஆனால், தற்போதைய விவகாரம் ஆவணம் தொடர்புடையதாக இருப்பதால், இதுதொடர்பான வழக்கு டிவிஷன் அமர்வு முன் நிலுவையில் உள்ளது. ஆகவே, மேல்முறையீட்டு மனு மீதான அனுமதி கோரும் விவகாரத்தில் டிவிஷன் பெஞ்ச் முடிவு எடுக்கும் வரை உயர்நீதிமன்றம் முடிவைத் தள்ளிவைக்கலாம் அல்லது இந்த விவகாரத்தை கூடுதல் நீதிபதிகள் அமர்வுக்குப் பரிந்துரைக்கலாம் என்று வாதிட்டார். இந்த வழக்கு விசாரணை புதன்கிழமையும் தொடர்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.