தாயை துன்புறுத்தி வந்த தந்தையை அடித்துக் கொன்ற மகள்
தாயை தொடர்ந்து துன்புறுத்தி வந்த தந்தையை அடித்துக் கொன்ற 16 வயது மகள் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
போபால்: தாயை தொடர்ந்து துன்புறுத்தி வந்த தந்தையை அடித்துக் கொன்ற 16 வயது மகள் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
பிகார் மாநிலம் போபாலில், புதன்கிழமை மாலை இந்த சம்பவம் நடந்துள்ளது. 16 வயது மகள் தனது 45 வயது தந்தையை, துணிகளைத் துவைக்கப் பயன்படுத்தப்படும் மட்டையைக் கொண்டு அடித்துக் கொன்றுள்ளார்.
தினமும் குடித்துவிட்டு வந்த தாயைத் துன்புறுத்தி வந்த தந்தையை, ஆத்திரத்தில் மகளே அடித்துக் கொன்றிருப்பதாக காவல்துறை அதிகாரி கே.கே. வெர்மா கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், வேலையில்லாமல் இருந்த தந்தையால் அந்த குடும்பம் வறுமையில் இருந்துள்ளது. அவர்களது மூத்த மகன் மட்டுமே கட்டட வேலை செய்து பணமீட்டிவந்துள்ளார். இதற்கிடையே, தந்தை தினந்தோறும் குடித்துவிட்டு வந்து தாயை துன்புறுத்தி வந்தால் பிள்ளைகளும் கடும் அதிருப்தியில் இருந்துள்ளனர். புதன்கிழமை மாலையும் அதுபோல நடக்கவே, கோபத்தில், மகள் மட்டையை எடுத்து தந்தையின் தலையில் அடிக்க, அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
உடனடியாக காவல்நிலையத்தைத் தொடர்பு கொண்ட மகள் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார். அவர் 18 வயது நிறைவடையாதவர் என்பதால், சிறார் சிர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளார். விசாரணை நடைபெற்று வருகிறது என்று கூறியுள்ளார்.