மத்திய மும்பையில் 55 அடுக்குமாடிகளைக் கொண்ட சிட்டி சென்டர் பொழுதுபோக்குப் பூங்காவைக் கொண்ட கட்டடத்தில் வியாழக்கிழமை இரவு பயங்கர தீ விபத்து நேரிட்டது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கட்டடத்துடன் இணைந்துள்ள குடியிருப்பில் வசித்து வந்த 3,500 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
மத்திய மும்பையில் அமைந்துள்ள சிட்டி சென்டர் கட்டடத்தில் வியாழக்கிழமை இரவு 8.50 மணிக்கு தீப்பற்றியது. உடனடியாக தீயை அணைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. ஆனால், வெள்ளிக்கிழமை அதிகாலை 2.41 மணிக்கு தீ மளமளவென மூன்று அடுக்குமாடிகளுக்கும் பரவியது. இது ஐந்தாம் நிலை தீ விபத்து என்று அறிவிக்கப்பட்டு, மும்பையில் உள்ள அனைத்து தீயணைப்பு நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன.
இந்த கட்டடம் தரைதளம் மற்றும் மூன்று மாடிகளைக் கொண்டது. கட்டடத்தில் உள்ள செல்லிடப்பேசி, பிரிண்டர் உள்ளிட்டப் பொருள்கள் விற்பனைக் கடையில் முதலில் தீ விபத்து நேரிட்டுள்ளது. அங்கிருந்து தீ மளமளவென மூன்று மாடிகளுக்கும் பரவியதாக மும்பை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
24 தீயணைப்பு வாகனங்கள், 16 தண்ணீர் டேங்குகள் 250 தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.