முகப்பு
இந்தியா

நம் பன்முகத்தன்மையை நமது பலவீனமாக்க முயல்கிறார்கள்: பிரதமர் மோடி

நம் பன்முகத்தன்மையை நமது பலவீனமாக்கவே சிலர் முயல்கிறார்கள். இது போன்ற சக்திகளை அடையாளம் கண்டு அனைவரும் கவனமாக இருக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

இந்தியா

நம் பன்முகத்தன்மையை நமது பலவீனமாக்க முயல்கிறார்கள்: பிரதமர் மோடி

நம் பன்முகத்தன்மையை நமது பலவீனமாக்கவே சிலர் முயல்கிறார்கள். இது போன்ற சக்திகளை அடையாளம் கண்டு அனைவரும் கவனமாக இருக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:45 PM
பகிர்:

புது தில்லி: நம் பன்முகத்தன்மையை நமது பலவீனமாக்கவே சிலர் முயல்கிறார்கள். இது போன்ற சக்திகளை அடையாளம் கண்டு அனைவரும் கவனமாக இருக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் குஜராத் மாநிலம் கேவடியாவில் நடைபெற்ற ஒற்றுமை தின கொண்டாட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். 

அங்கு அமைந்துள்ள ஒற்றுமை சிலைக்கு அவர் மலர் மரியாதை செலுத்தி, ஒற்றுமை உறுதிமொழியை செய்து வைத்து, ஒற்றுமை அணிவகுப்பையும் பார்வையிட்டார்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், கேவடியாவின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்காக தொடங்கப்பட்டுள்ள பல்வேறு திட்டங்களால் அந்தப் பகுதியின் சுற்றுலா கூடுதல் வளர்ச்சி அடையும் என்று தெரிவித்தார். சர்தார் பட்டேலைக் காண விரும்பும் சுற்றுலாப் பயணிகள், இனி கடல் - விமான சேவையைப் பயன்படுத்தி ஒற்றுமை சிலையைச் சென்று காணலாம் என்று அவர் கூறினார்.

வால்மீகி மகரிஷியின் கலாச்சார ஒற்றுமை:
நாம் இன்று காணும் இந்தியாவைவிட மிக துடிப்பான மற்றும் சக்தி வாய்ந்த, கலாச்சார ஒற்றுமையுடன் கூடிய நாட்டை உருவாக்குவதற்காக பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே வால்மீகி மகரிஷி முயற்சிகள் மேற்கொண்டதாக பிரதமர் குறிப்பிட்டார்.

ஒற்றுமை தினத்தைக் கொண்டாடும் அதே நாளில் வால்மீகியின் பிறந்த நாளும் கொண்டாடப்படுவது தமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. கரோனா பரவலுக்கு எதிரான நாட்டின் கூட்டு வலிமையும், போராடும் தன்மையும் இதுவரை இல்லாத ஒரு புது அளவை எட்டி இருப்பது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறினார்.

காஷ்மீரின் வளர்ச்சிக்கு எதிராக இருந்து வந்த பல்வேறு தடைகளை பின்னுக்குத் தள்ளி, தற்போது அந்த மாநிலம் புதிய வளர்ச்சியை நோக்கிச் சென்று கொண்டுள்ளது. இன்று நாடு ஒற்றுமையின் புதிய பரிமாணத்தை உருவாக்கி வருகிறது. வடகிழக்குப் பகுதியில் அமைதியை நிலைநாட்டவும், அதன் வளர்ச்சியை ஊக்குவிக்கவும் அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளை மோடி பட்டியலிட்டார்.

இந்தியாவின் கலாசாரத்தை மீட்டெடுக்கும் சர்தார் பட்டேலின் கனவை நனவாக்கும் வகையில் உச்ச நீதிமன்றத்தின் ஆணையைப் பின்பற்றி அயோத்தியில் ராமர் கோவில் அமைக்கப்பட்டு வருகிறது.

நாட்டிலுள்ள 130 கோடி மக்களும் இணைந்து சமத்துவம் மற்றும் வாய்ப்புகள் நிறைந்த வகையில் வலுவான மற்றும் திறமையான நாட்டை உருவாக்கி வருகிறது. தன்னிறைவு அடைந்த தேசத்தால் மட்டுமே அதன் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பில் நம்பிக்கை கொள்ள முடியும்.  எனவே நம் நாடு பல்வேறு துறைகளில், குறிப்பாக பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு அடையும் பாதையில்  சென்று கொண்டிருக்கிறது.

எல்லை சார்ந்த விஷயங்களிலும் இந்தியாவின் பார்வையும் அணுகுமுறையும் மாறி இருப்பதாக பிரதமர் தெரிவித்தார். அண்டை நாடுகளை விமர்சித்த அவர், இந்திய நிலத்தை குறி வைப்பவர்களுக்கு தகுந்த பதிலடி கிடைத்து வருகிறது. நாட்டின் எல்லைகளில் 100 கிலோ மீட்டர் அளவான சாலைகள் பல்வேறு மேம்பாலங்கள் மற்றும் சுரங்கங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டை முழுவதும் பாதுகாக்க இந்தியா தயாராக இருக்கிறது.

தீவிரவாதத்திற்கு எதிராக அனைத்து நாடுகளும், அரசுகளும், மதங்களும் இணைந்து செயல்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டிருப்பதாக பிரதமர் வலியுறுத்தினார். அமைதி உணர்வு, சகோதரத்துவம் மற்றும் பரஸ்பர மரியாதை முதலியவை உண்மையான மனிதத் தன்மையின் அடையாளங்கள் என்று அவர் கூறினார். தீவிரவாதம் -வன்முறையால் யாருக்கும் எந்த நன்மையும் இல்லை. நமது பன்முகத் தன்மை தான் நம் அடையாளம் மற்றும் பிறரிடம் இருந்து நம்மை தனித்து நிறுத்துகிறது. நம் பன்முகத்தன்மையை நமது பலவீனமாக்கவே அவர்கள் முயல்கிறார்கள். இது போன்ற சக்திகளை அடையாளம் கண்டு அனைவரும் கவனமாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இன்று நடைபெற்ற வீரர்களின் அணிவகுப்பு புல்வாமா தாக்குதல் சம்பவத்தைத் தமக்கு  நினைவூட்டியதாக பிரதமர் தெரிவித்தார். நமது அண்டை நாட்டின் நாடாளுமன்றத்தில் அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கைகள் உண்மையை வெளிப்படுத்துவதாக அவர் கூறினார்.

குஜராத் மாநில காவல் படை, மத்திய ரிசர்வ் ஆயுதப்படை,  எல்லை பாதுகாப்புப் படை, இந்தோ திபெத் எல்லைப் படை மத்திய தொழில் பாதுகாப்புப் படை மற்றும் தேசிய பாதுகாப்பு வீரர்கள் வண்ணமிகு அணிவகுப்பை பிரதமர் முன்னதாக பார்வையிட்டார்.

மத்திய ரிசர்வ் காவல் படையின் துப்பாக்கி ஏந்திய  பெண் வீரர்களின் அணிவகுப்பும் இதில் இடம் பெற்றிருந்தது. இந்திய விமானப் படையின் ஜாகுவார் பிரிவு வானில் சாகச நிகழ்ச்சிகளை நடத்தியது. ஒற்றுமை தினத்தை முன்னிட்டு இந்திய பழங்குடி பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளையும் பிரதமர் பார்வையிட்டார்.

முழு கட்டுரையைப் படிக்க →