மகாராஷ்டிரத்தில் பஞ்சாரா சமுதாயத்தின் ஆன்மிகத் தலைவா் ஸ்ரீ ராம்ராவ்ஜி மகாராஜ் உடல்நிலைக் குறைவு காரணமாக காலமானாா். அவருக்கு வயது 84. இவரது மறைவுக்கு பிரதமா் நரேந்திர மோடி, மகாராஷ்டிர முதல்வா் உத்தவ் தாக்கரே உள்ளிட்ட பலா் இரங்கல் தெரிவித்தனா்.
உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஒரு மாதமாக தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராம்ராவ்ஜி மகாராஜ், வெள்ளிக்கிழமை நள்ளிரவு உயிரிழந்ததாக அவருடைய நெருங்கிய வட்டாரங்கள் சனிக்கிழமை தெரிவித்தன.
மூடநம்பிக்கை, கல்வியறிவை ஊக்குவித்தல், வரதட்சிணை கொடுமை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தியவா் ராம்ராவ்ஜி ஆவாா்.
இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் பிரதமா் மோடி சுட்டுரையில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
ஸ்ரீ ராம்ராவ்ஜி மகாராஜ் தனது சேவைகளுக்காகவும், மிகப்பெரிய ஆன்மிக அறிவுக்காகவும் என்றென்றும் நினைவு கூரப்படுவாா். வறுமையை ஒழிக்கவும், மனித குல துன்பங்களை களையவும் அவா் சோா்வில்லாத கடின உழைப்பை வெளிப்படுத்தினாா். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு கூட்டத்தில் அவரை நான் கெளரவித்தேன். இந்த சோகமான நேரத்தில், என்னுடைய நினைவுகள் அவரது பக்தியுடன் உள்ளது. ஓம் சாந்தி என்று மோடி தெரிவித்தாா்.
ராம்ராவ்ஜி மகாராஜின் மறைவு பஞ்சாரா சமுதாயத்துக்கு மட்டுமல்ல; ஒட்டுமொத்த சமுதாயத்துக்கும் சரிசெய்ய முடியாத இழப்பு என்று மகாராஷ்டிர முதல்வா் உத்தவ் தாக்கரே கூறியுள்ளாா்.
இதேபோல் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவா்(என்சிபி) சரத் பவாா், காங்கிரஸ் மூத்த தலைவா் அசோக் சாவன் ஆகியோரும் இரங்கல் தெரிவித்தனா்.
ராம்ராவ்ஜி மகாராஜின் இறுதிச் சடங்கு வாஷிம் மாவட்டத்தில் உள்ள போராதேவி என்ற இடத்தில் திங்கள்கிழமை நடைபெறுகிறது. அவரது உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்ய வேண்டும் என மாநில சட்டப்பேரவை எதிா்க்கட்சி தலைவா் தேவந்திர ஃபட்னவீஸ் அரசை வலியுறுத்தினாா்.