பினராயி விஜயன் பதவி விலக வலியுறுத்தி போராட்டம்
கேரள தங்கம் கடத்தல் விவகாரம் தொடர்பாக முதல்வர் பினராயி விஜயன் பதவி விலக வலியுறுத்தி இளைஞர் காங்கிரஸார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவனந்தபுரம்: கேரள தங்கம் கடத்தல் விவகாரம் தொடர்பாக முதல்வர் பினராயி விஜயன் பதவி விலக வலியுறுத்தி இளைஞர் காங்கிரஸார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கேரளத்தில் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தங்கம் கடத்திய வழக்கில் தகவல் தொழில்நுட்ப மேலாளர் ஸ்வப்னா சுரேஷ் மற்றும் ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் ஆகியோரை கைது செய்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனிடையே முதல்வரின் நெருங்கிய வட்டாரத்திற்குள் இருப்பவர்கள் தங்கம் கடத்தலில் ஈடுபட்டதால், முதல்வர் பினராயி விஜயன் பதவி விலக வலியுறுத்தி பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அவ்வபோது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
மேலும் கடந்த மாதம் தலைமை செயலக கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டதில், தங்கம் கடத்தல் விவகாரத்தில் முக்கிய ஆவணங்களை அழிக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டி இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்தவகையில் இன்று (செவ்வாய்க் கிழமை) கேரள தலைமைச் செயலகத்தின் எதிரே இளைஞர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் முதல்வர் பினராயி விஜயன் பதவி விலக வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் பாதுகாப்பிற்காக அப்பகுதியில் காவல்துறையினர் நிறுத்திவைக்கப்பட்டுள்ளனர்.