”கரோனா வைரஸ் போய்விட்டது” : மேற்குவங்க பாஜக தலைவர் சர்ச்சைக் கருத்து
கரோனா போய்விட்டது என மேற்குவங்க மாநில பாஜக தலைவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான பொதுக்கூட்டத்தில் தெரிவித்த கருத்து சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
கரோனா போய்விட்டது என மேற்குவங்க மாநில பாஜக தலைவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான பொதுக்கூட்டத்தில் தெரிவித்த கருத்து சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
மேற்குவங்க மாநிலத்தில் சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளன. இந்நிலையில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பாஜகவினர் தனியாகலி பகுதியில் பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்தப் பேரணியில் மாநில பாஜக மூத்தத் தலைவர் திலீப் கோஷ் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் முதல்வர் மம்தா பானர்ஜியை விமர்சித்துப் பேசினார். தொண்டர்களிடம் அவர் பேசும்போது, “வங்காளத்தில் கரோனா பாதிப்பு இல்லை. அது போய்விட்டது. பாஜகவை ஒடுக்க மாநிலத்தில் பொதுமுடக்கத்தை மம்தா அறிவித்து வருகிறார்.” என்றார்.
மேலும், “பாஜகவின் பேரணிகளைத் தடுக்கும்வகையில் மம்தா செயல்பட்டு வருகிறார். பொய்யாக கரோனா இருப்பதாகக் கூறி விதிக்கப்படும் பொதுமுடக்கத்தால் பாஜகவைத் தடுக்க முடியாது. இந்துக்களுக்கு எதிராக பொதுமுடக்கம் பயன்படுத்தப்படுகிறது.” எனத் தெரிவித்தார்.
கரோனா நெருக்கடி குறித்து பிரதமர் நரேந்திர மோடி பொதுமக்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம் எனக் கருத்துத் தெரிவித்திருந்த நிலையில் சொந்தக் கட்சிப் பிரமுகர் தெரிவித்த கரோனா பாதிப்பு குறித்தக் கருத்து சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
மேற்குவங்கத்தில் இதுவரை 1 லட்சத்து 93 ஆயிரத்து 175 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 3771 பேர் கரோனா பாதிப்பால் பலியாகி உள்ளதாக அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.