பிகாரில் தனது தந்தையின் துப்பாக்கியுடன் சுய படம் எடுக்கும்போது தற்செயலாக தன்னைத் தானே சுட்டுக் கொண்ட பதின்பருவ சிறுவன் பலியாகிய சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிகாரில் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் வசிப்பவர் ஹிமான்ஷு குமார். இவர் ராஜஸ்தானில் உள்ள கோட்டா நகரில் போட்டித் தேர்வுக்குத் தயாராகி வருகிறார். நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலால் ஹிமான்ஷு குமார் படித்து வந்த பயிற்சி நிறுவனம் மூடப்பட்டது. இதனால் இவர் தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை தனது தந்தையின் துப்பாக்கியை தலையில் வைத்துக்கொண்டு சுய படம் எடுக்க முயன்றபோது தவறுதலாக துப்பாக்கியின் பொத்தானை அழுத்தியுள்ளார். இதனால் பலத்த சத்தத்துடன் சுடப்பட்ட ஹிமான்ஷு ரத்த வெள்ளத்தில் தரையில் விழுந்தார்.
உடனடியாக சத்தம் கேட்டு வந்த அவரது குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவர் பலியானார்.
இதுகுறித்து விசாரித்து வருவதாக உள்ளூர் காவல் நிலைய பொறுப்பாளர் தினேஷ் குமார் யாதவ் தெரிவித்துள்ளார்.