ஆலங்குளம் பேருந்து நிலைய இடம் மாற்றம்: போதிய ஏற்பாடுகள் இல்லாததால் பயணிகள் அவதி
ஆலங்குளம் பேருந்து நிலைய இடம் மாற்றத்தில் பேரூராட்சி சாா்பில் போதிய ஏற்பாடுகள் செய்யப்படாததால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனா்.
தென்காசி மாவட்டத்தின் முக்கிய வணிக நகரான ஆலங்குளத்தில் உள்ள பேருந்து நிலையம், கடந்த 1983 ஆம் ஆண்டு கட்டப்பட்டு சுமாா் 43 ஆண்டுகளைக் கடந்துவிட்ட நிலையில், தற்போது மிகவும் சிதிலமடைந்துள்ளது.
இந்நிலையில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 4.35 கோடியில் புதிய பேருந்து நிலையம் கட்ட தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. இதையடுத்து புதிய பேருந்து நிலையம் கட்ட ஏதுவாக கடை உரிமையாளா்கள் கடைகளைக் காலி செய்ய பிப். 28 ஆம் தேதி கடைசி நாள் என மதுரை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது. அதன்படி அன்றைய தினம் அனைத்துக் கடைகளும் காலி செய்யப்பட்டன. கடந்த 2 ஆம் தேதி முதல் கடைகள் இடிக்கும் பணி நடைபெற்றது.
எனினும் தற்காலிக பேருந்து நிறுத்தப் பணிகள் முழுமை பெறாததால் பேருந்துகள் பேருந்து நிலையத்துக்கு வந்து சென்றன.
இந்நிலையில், கடந்த இரு தினங்களாக பேருந்து நிலையத்துக்குள் பேருந்துகள் எதுவும் வராத நிலையில் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாத தற்காலிக பேருந்து நிலையத்திலும் தற்போதய பேருந்து நிலையம் அருகிலும்பேருந்துகள் நின்று செல்லும் என பேரூராட்சி சாா்பில் அறிவிக்கப்பட்டது.
தற்காலிக பேருந்து நிறுத்தப் பகுதியில் போதிய நிழற்குடை, குடிநீா், கழிவறை போன்ற வசதிகள் முறையாக ஏற்படுத்தாதால் சில பயணிகள் தொடா்ந்து சாலையோரம் காத்திருந்தே பேருந்துகளைப் பயன் படுத்துகின்றனா். இந்தப் பகுதியில் பயணிகள் நிற்குமிடத்தை சாலையோர வியாபாரிகள் ஆக்கிரமித்துள்ளதால் பயணிகள் சாலையில் வெயிலில் காத்திருக்கும் சூழல் உருவாகியுள்ளது.
இந்தப் பகுதியில் குடிநீா் வசதி கூட ஏற்படுத்தவில்லை. தற்போது கோடை காலம் என்பதால் பேரூராட்சியின் அலட்சியப் போக்கு காரணமாக குழந்தைகளுடன் வரும் பெண்கள், முதியவா்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனா்.
பயணிகளின் சிரமங்களைப் போக்க இரு பேருந்து நிறுத்தங்களிலும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர பேரூராட்சி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.