புது தில்லி: நாட்டில் கரோனா தொற்றுப் பரவலின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நடைமுறைப்படுத்தப்பட்ட பொது முடக்கம் காரணமாக சுமார் 29 லட்சம் பேருக்கு கரோனா தொற்றுப் பரவுவது தடுக்கப்பட்டது, 78 ஆயிரம் பேர் பலியாவது தவிர்க்கப்பட்டது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் இன்று கரோனா தொற்றுப் பரவல் குறித்து பேசிய மத்திய அமைச்சர் ஹர்ஷ வர்தன், மத்திய அரசால் மிக தைரியமாக எடுக்கப்பட்ட பொது முடக்க நடவடிக்கை காரணமாக, ஒட்டுமொத்த நாடும் கரோனா பேரிடருக்கு எதிராக ஒன்றிணைய முடிந்தது. பொது முடக்கம் காரணமாக நாட்டில் 14 - 29 லட்சம் பேருக்கு கரோனா தொற்றுப் பரவுவது தடுக்கப்பட்டது. அதுபோலவே கரோனா பாதித்து 37,000 முதல் 78,000 பேர் வரை பலியாவதும் தவிர்க்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 4 மாதங்களில் மத்திய அரசு நடைமுறைப்படுத்திய பொது முடக்கக் காலத்தில் மருத்துவ உள்கட்டமைப்புகளையும் பலப்படுத்திக் கொள்ள உதவியது. முகக்கவசங்கள், தற்பாதுகாப்புக் கவசஙகள் உற்பத்தி, வென்டிலேட்டர்கள் தயாரிப்புப் பணிகளும் துரிதப்படுத்தப்பட்டன. இதனால், தற்போது மருத்துவத் தேவையில் இந்திய தற்சார்பு நாடாக மாறியுள்ளது.
நாட்டில் கரோனா உறுதி செய்யப்படுவதில் 92 சதவீதம் பேருக்கு லேசான அறிகுறியே காணப்படுகிறது. சிகிச்சை பெறுவோரில் 5.8 சதவீதம் பேருக்கு மட்டுமே ஆக்ஸிஜன் சேவை வழங்கப்படுகிறது. 1.7 சதவீதம் பேர்தான் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுகிறார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.