பிரதமர் நிவாரண நிதி: மத்திய அமைச்சர் பதிலுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு
பொதுமக்களின் பணத்தை பல்வேறு பெயர்களால் காங்கிரஸ் தலைமையைச் சேர்ந்த காந்தி குடும்பத்தினர் மோசடி செய்துள்ளனர் என்ற மத்திய நிதி இணையமைச்சரின் கருத்துக்கு காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பொதுமக்களின் பணத்தை பல்வேறு பெயர்களால் காங்கிரஸ் தலைமையைச் சேர்ந்த காந்தி குடும்பத்தினர் மோசடி செய்துள்ளனர் என்ற மத்திய நிதி இணையமைச்சரின் கருத்துக்கு காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் மக்களவையில் வரிவிதிப்பு மற்றும் பிற சட்ட மசோதாக்கள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களான சசிதரூர்,மணீஷ் திவாரி மற்றும் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் கரோனா பொது நிவாரண நிதியாக அறிவிக்கப்பட்ட பிரதமர் நிவாரண நிதி குறித்த கேள்வியை எழுப்பினர்.
அதற்கு பதிலளித்துப் பேசிய மத்திய நிதி இணையமைச்சர் அனுராக் தாகூர், “பல்வேறு பெயர்களில் பொதுமக்களின் பணத்தை காங்கிரஸ் தலைமையின் காந்தி குடும்பம் மோசடி செய்துள்ளது. மேலும் பதிவு செய்யாத அமைப்பின் மூலம் பொதுமக்களிடமிருந்து நிதியை முன்னாள் பிரதமர் நேரு பெற்றார்.” எனத் தெரிவித்தார்.
இதற்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அமைச்சர் தெரிவித்த கருத்துக்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனக்கோரி கூச்சல் எழுப்பினர்.
இதனைத் தொடர்ந்து அவை நடவடிக்கைகளை சபைத்தலைவர் ஒத்திவைத்தார்.