கேரள உயர்கல்வித்துறை அமைச்சர் கே.டி.ஜலீல் பதவி விலக வலியுறுத்தி திருவனந்தபுரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை காவல்துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து விரட்டியடித்தனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் தங்கம் கடத்தல் வழக்கில் தொடர்புடையதாக கேரள உயர்கல்வித்துறை அமைச்சர் கே.டி.ஜலீலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.
அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்த ஜலீலுக்கு எதிராக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து இரண்டு முறை அமலாக்கத்துறை விசாரணைக்கு அவர் ஆஜரானார். எனினும் அவரது அறிக்கையில் முரண்பாடுகள் இருப்பதால் மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே கேரள தங்கம் கடத்தல் வழக்கில் தொடர்புடைய அமைச்சர் கே.டி.ஜலீல் பதவி விலக வலியுறுத்தி திருவனந்தபுரம் தலைமைச் செயலகம் அருகே பாஜகவினர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தண்ணீரை பீய்ச்சி அடித்து காவல்துறையினர் விரட்டியடித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.