முகப்பு
இந்தியா

மும்பையில் முகக்கவசம் அணிவது கட்டாயம்: மாநகராட்சி உத்தரவு

மும்பையில் கரோனா பாதிப்பு சமூகத் தொற்றாக மாறியிருக்கும் நிலையில், பொதுவிடங்களுக்கு வரும் மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

Updated On : 8 ஏப்ரல், 2020 at 3:44 PM
பகிர்:

மும்பை: மும்பையில் கரோனா பாதிப்பு சமூகத் தொற்றாக மாறியிருக்கும் நிலையில், பொதுவிடங்களுக்கு வரும் மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில், வீட்டை விட்டு வெளியேறி, பொதுவிடத்துக்கு வரும் பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டியது கட்டாயம் என்று மும்பை மாநகராட்சி ஆணையர் பிரவீன் பர்தேஷி தெரிவித்துள்ளார்.

வெளியில் வரும் மக்கள், வாகனங்களை இயக்குவோர், பொதுவிடங்களில் கூடுவோர் என அனைவரும் எப்போதும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.

Advertisement

கடைகளில் விற்கப்படும் முகக்கவசமாகவோ அல்லது வீட்டில் சாதாரணத் துணியால் தைக்கப்படும் முகக்கவசமாகவோ இருக்கலாம் என்றும், முகக் கவசத்தை பயன்படுத்தியதும், அதனை முறையாக துவைத்து கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்தி மீண்டும் பயன்படுத்தலாம் என்றும் ஆணையர் தெரிவித்துள்ளார்.

இந்த உத்தரவை மீறுவோர் இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 188ன் கீழ் தண்டிக்கப்படுவார்கள் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, மும்பையில் இதுவரை உள்வட்டப் பரவலாக இருந்த கரோனா தொற்று தற்போது சமூகத் தொற்றாக மாறியிருப்பதாக பிரிஹன்மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சமீபத்தில் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் யாரும் வெளிநாட்டுக்குச் சென்று வராததும், வெளிநாட்டுக்குச் சென்று வந்தவர்களுடன் நெருங்கிய தொடர்பில்லாத நிலையில், கரோனா பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மும்பையில் தற்போது 525 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு இதுவரை கரோனா பாதித்து 35 பேர் மரணம் அடைந்துள்ளனர். மரணம் அடைந்த 34 பேரில் 11 பேரும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் அல்ல என்று பிஎம்சி தெரிவித்துள்ளது.

பிரிஹன்மும்பை மாநகராட்சி வெளியிட்டிருக்கும் தகவலில், அதிக நெருக்கடி நிறைந்த குடிசைப் பகுதிகளைச் சேர்ந்த பலருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வோர்லி, பிரபாதேவி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் சிலருக்கும் கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே மும்பையில் மருத்துவப் பணியாளர்கள் 50 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது கரோனா தொற்று சமூகப் பரவலாக மாறிவிட்டதாகக் கூறப்பட்டுள்ளது. வெளிநாட்டுக்குச் சென்று வராதவர்களும், வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுடன் எந்த தொடர்பும் இல்லாதவர்களுக்கும் நகரின் பல்வேறு பகுதிகளில் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பது கவலை அளிப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.