மும்பையில் உடல் உறுப்புகள் செயலிழந்து மரணம் அடைந்த 36 வயது மருத்துவருக்கு கரோனா
கோவண்டியில் உள்ள இரண்டு தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றி வந்த மும்பையைச் சேர்ந்த 36 வயது பொது மருத்துவர், கரோனா பாதித்து வியாழக்கிழமை உயிரிழந்தார்.
கோவண்டியில் உள்ள இரண்டு தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றி வந்த மும்பையைச் சேர்ந்த 36 வயது பொது மருத்துவர், கரோனா பாதித்து வியாழக்கிழமை உயிரிழந்தார்.
அவர் சிகிச்சை அளித்த நோயாளிகளிடம் இருந்து கரோனா தொற்று பரவியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
முன்னதாக, அந்த மருத்துவருக்கு வேறு எந்த உடல்நலப் பிரச்னைகளும் இல்லாத நிலையில், அவர் மிக மோசமான மூச்சுத் திணறல் காரணமாக மரணம் அடைந்தார் என்றும், மேலும் அவருக்கு உடலுறுப்புகள் செயலிழந்துவிட்டன என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Advertisement
உயிரிழந்த மருத்துவரின் சகோதரரும் ஒரு மருத்துவர், அவர் இது பற்றி கூறுகையில், ஏப்ரல் 13-ம் தேதி அவருக்கு மூச்சு விடுவதில் பிரச்னை ஏற்பட்டது. அவர் 15-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.
தொடர்ந்து அவரது உடலுறுப்புகள் ஒவ்வொன்றும் செயலிழக்க ஆரம்பித்தன. அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதும், உடனடியாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்க குடும்பத்தினர் முயன்றனர். ஆனால், தொடர்பு கொண்ட எந்த மருத்துவமனையிலும் தீவிர சிகிச்சைப் பிரிவில் படுக்கை வசதிகள் கிடைக்கவில்லை. இறுதியாக ஒரு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தும் பலனளிக்கவில்லை.
அவருடன் மீண்டும் நாங்கள் பேச வாய்ப்பே கிடைக்கப்போவதில்லை. அவருக்கு எப்படித்தான் கரோனா தொற்று பரவியிருக்கும் என்று தெரியாமலேயே போய்விட்டது என்கிறார் கண்ணீரோடு.
மருத்துவப் பணியாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டியது மிகவும் அவசியம் என்றும், அவ்வாறு செய்யாவிட்டால் மிக மோசமான சூழ்நிலையை ஏற்படுத்திவிடும் என்று தொற்றுநோய் துறை மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.