ஆமதாபாத்: குடும்பத்தினருடன் பேச கரோனா நோயாளிகளுக்கு விடியோ கால் வசதி
ஆமதாபாத்தில் உள்ள சிவில் மருத்துவமனையில் கரோனா நோயாளிகள் தங்கள் குடும்பத்தினருடன் பேச விடியோ கால் வசதி செய்து தரப்பட்டுள்ளதாக குஜராத் மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது.
ஆமதாபாத்தில் உள்ள சிவில் மருத்துவமனையில் கரோனா நோயாளிகள் தங்கள் குடும்பத்தினருடன் பேச விடியோ கால் வசதி செய்து தரப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சையின்போது தனிமைப்படுத்தப்படுகின்றனர். இந்நிலையில் கரோனா நோயாளிகள் அவர்களது குடும்பத்தினருடன் பேச ஆமதாபாத்தில் உள்ள சிவில் மருத்துவமனையில் விடியோ கால் வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது.
இதுகுறித்து அங்கு கரோனா சிகிச்சை பெற்று வரும் நோயாளி ஒருவர் கூறியதாவது:
Advertisement
நான் கடந்த மூன்று நாள்களாக இங்கு இருக்கிறேன். எனக்கு நன்றாக சிகிச்சை அளித்து வருகின்றனர். சரியான நேரத்தில் உணவு மற்றும் மருந்துகள் வழங்கப்படுகின்றன.
இதுதவிர நாங்கள் விடியோ அழைப்பு மூலம் தினமும் எங்கள் குடும்பத்தினருடன் பேசுகிறோம். எங்களுக்கு சிறப்பான சிகிசை கிடைப்பதை நினைத்து அவர்களும் மகிழ்ச்சி அடைகிறார்கள் என்று தெரிவித்தார்.
மற்றொரு பெண்மணி ஒருவர், 'எனக்கு இரண்டு குழந்தைகள். ஒருவர் அமெரிக்காவிலும், மற்றொரு குழந்தை பெங்களூருவிலும் இருக்கிறார்கள். அவர்கள் என்னைப் பார்க்க முடியாததால் பதட்டமாக இருந்தனர். இப்போது விடியோ அழைப்பு மூலம் என் குழந்தைகளிடம் பேசியது ஆறுதலாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது' என்று தெரிவித்தார்.
மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, குஜராத்தில் மொத்தம் 5,428 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது வரை 1,042 பேர் குணமடைந்துள்ளனர். அதே நேரத்தில் மாநிலத்தில் 290 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.