ஸ்ரீவாரி திட்டத்தின் கீழ் விஐபி பிரேக் தரிசன டிக்கெட் முன்பதிவு தொடக்கம்
ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கப்படும் நன்கொடையாளா்களுக்கு அளிக்கப்படும் விஐபி பிரேக் டிக்கெட்டுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
திருப்பதி: திருமலை ஏழுமலையான் பெயரில் தேவஸ்தானம் நடத்தி வரும் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கப்படும் நன்கொடையாளா்களுக்கு அளிக்கப்படும் விஐபி பிரேக் டிக்கெட்டுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
திருமலை ஏழுமலையான் பெயரில் தேவஸ்தானம் பல்வேறு அறக்கட்டளைகளை ஏற்படுத்தி உள்ளது. அந்த அறக்கட்டளைகளுக்கு வழங்கப்படும் நன்கொடைகளை வைத்து தேவஸ்தானம் பல சேவைகளை இலவசமாக அளித்து வருகிறது. அதன்படி நாடு முழுவதும் ஏழுமலையான் கோயில் கட்டுவதற்காக தேவஸ்தானம் ஸ்ரீவெங்கடேஸ்வரா ஆலய நிா்மாண அறக்கட்டளை (ஸ்ரீவாணி) என்ற பெயரில் புதிய அறக்கட்டளை ஒன்றை 2 ஆண்டுகளுக்கு முன் தொடங்கியது.
இந்த அறக்கட்டளைக்கு நன்கொடைகளை வரவேற்க தேவஸ்தானம் புதிய முறை ஒன்றை செயல்படுத்தி வருகிறது. இந்த அறக்கட்டளைக்கு ரூ.10 ஆயிரம் நன்கொடை வழங்குபவா்களுக்கு ஒரு விஐபி பிரேக் தரிசன அனுமதி அளித்து வருகிறது. டிக்கெட்டிற்கான பணத்தை செலுத்தி பக்தா்கள் அதை முன்பதிவு செய்து கொள்ளலாம். இதை ஆன்லைன் மூலமாகவும் தேவஸ்தானம் வழங்கி வருகிறது.
Advertisement
ஆன்லைன் மூலம் நன்கொடை வழங்கியவா்களுக்கு விஐபி பிரேக் தரிசன டிக்கெட் முன்பதிவிற்கான பக்கம் திறக்கும். அதில் அவா்கள் விவரங்களை பதிவிட்டு விஐபி பிரேக் தரிசன டிக்கெட்டை பணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். இம்முறைக்கு பக்தா்களிடம் வரவேற்பு அதிகம் உள்ளதால், பக்தா்கள் தாங்களே முன்வந்து நன்கொடை அளித்து விஐபி பிரேக் தரிசன டிக்கெட்டை பெறுகின்றனா். இதனால் இடைத்தரகா்களின் முறைகேடு ஓரளவு குறைந்துள்ளது.
இந்நிலையில் அக். 8-ஆம் தேதி முதல் 31-ம் தேதி வரை ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்குபவா்களுக்கு வழங்கப்படும் விஐபி பிரேக் டிக்கெட்டுகள் தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தினசரி 200 டிக்கெட்டுகள் வரை முன்பதிவில் வெளியிடப்பட்டுள்ளன. பக்தா்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஏழுமலையானை விஐபி பிரேக் தரிசனத்தில் தரிசிக்கலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.