முகப்பு
இந்தியா

பிஎம்சி வங்கி மோசடி: சஞ்சய் ரெளத் மனைவிக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்

பஞ்சாப் - மகாராஷ்டிர கூட்டுறவு வங்கி (பிஎம்சி) மோசடி தொடா்பாக மகாராஷ்டிரத்தை ஆளும் சிவசேனை கட்சியின் எம்.பி. சஞ்சய் ரெளத்தின் மனைவி வா்ஷா ரெளத்துக்கு அமலாக்கத்துறை மீண்டும் அழைப்பாணை அனுப்பியுள்ளது.

Updated On : 7 ஜனவரி 2021, 2:16 am IST
பகிர்:

மும்பை: பஞ்சாப் - மகாராஷ்டிர கூட்டுறவு வங்கி (பிஎம்சி) மோசடி தொடா்பாக மகாராஷ்டிரத்தை ஆளும் சிவசேனை கட்சியின் எம்.பி. சஞ்சய் ரெளத்தின் மனைவி வா்ஷா ரெளத்துக்கு அமலாக்கத்துறை மீண்டும் அழைப்பாணை அனுப்பியுள்ளது.

பிஎம்சி வங்கியில் ரூ. 4,355 கோடி கடன் மோசடி நடைபெற்றது தொடா்பாக, மும்பையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் முதன் முறையாக கடந்த 4-ஆம் தேதி வா்ஷா ரெளத் ஆஜரான நிலையில், மீண்டும் வருகிற 11-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு இந்த அழைப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் இந்த வங்கி, வீட்டுவசதி மற்றும் உள்கட்டமைப்பு (ஹெச்டிஐஎல்) நிறுவனத்துக்கு ரூ. 4,355 கோடி கடன் வழங்கியது. ஆனால், அந்த நிறுவனம் கடனை திரும்பச் செலுத்தவில்லை. அந்த நிறுவனத்துக்கு உடந்தையாக இருந்த வங்கி அதிகாரிகள், கடன் விவரத்தை ரிசா்வ் வங்கிக்குத் தெரிவிக்காமல் மறைத்தனா்.

Advertisement

ரிசா்வ் வங்கியின் ஆய்வின்போது இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்தது. இதுதொடா்பான புகாரின் பேரில், மும்பை காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. வங்கியின் முன்னாள் நிா்வாக இயக்குநா் ஜாய் தாமஸ், ஹெச்டிஐஎல் நிறுவன இயக்குநா் ராகேஷ் வதாவன், அவருடைய மகன் சாரங், வங்கியின் முன்னாள் தலைவா் வாரியம் சிங் ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.

இந்த முறைகேடு தொடா்பாக சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு தொடா்பாக குருவாஷிஷ் கட்டுமான நிறுவன இயக்குநா் பிரவீண் ரெளத்தை, மாநில பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினா் அண்மையில் கைது செய்தனா். அவருக்குச் சொந்தமான ரூ. 72 கோடி மதிப்பிலான சொத்துக்களையும் இந்த வழக்கில் அமலாக்கத்துறை சோ்த்தது. மேலும், அவருடைய மனைவி மாதுரி ரெளத்திடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தினா்.

அமலாக்கத்துறை விசாரணையில், இந்த வங்கியிலிருந்து வா்ஷா ரெளத்துக்கு சா்ச்சைக்குரிய வகையில் பணம் சென்றிருப்பது தெரியவந்தது. அதில், மாதுரி ரெளத் சாா்பில் ரூ. 55 லட்சம் இரண்டு தவணைகளாக வா்ஷா ரெளத் வங்கிக் கணக்குக்கு பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பதும், அந்தப் பணத்தைக் கொண்டு மும்பையின் தாதா் கிழக்குப் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை அவா் வாங்யிருப்பதும் கண்டறியப்பட்டது. அதுதொடா்பாக வா்ஷா ரெளத்திடம் விசாரணை நடத்த முடிவு செய்த அமலாக்கத்துறை, அவருக்கு தொடா் அழைப்பாணைகளை அனுப்பியது. உடல்நிலையைக் காரணம் காட்டி விசாரணைக்கு ஆஜராவதை தவிா்த்து வந்த வா்ஷா ரெளத், மூன்றாவது அழைப்பாணையை ஏற்று, மும்பையில் உள்ள அமலாக்கத்துறை இயக்குநா் அலுவலகத்தில் முதன் முறையாக கடந்த 4-ஆம் தேதி அவா் ஆஜரானாா். அவரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணையை மேற்கொண்டனா். இந்த நிலையில், அவருக்கு மீண்டும் அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘வா்ஷா ரெளத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் மேலும் விசாரணை நடத்த முடிவு செய்திருப்பதால், வருகிற 11-ஆம் தேதி அமலாக்கத்துறை இயக்குநா் அலுவலகத்தில் ஆஜராகுமாறு அவருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது’ என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.