முகப்பு
இந்தியா

நாட்டின் எந்தப் பகுதியிலும் இந்தியரை வெளிநபா் என கூற முடியாது

நாட்டின் எந்தப் பகுதியிலும் இந்தியா்கள் மீது வெளிநபா் என முத்திரை குத்த முடியாது என்று மேற்கு வங்க ஆளுநா் ஜகதீப் தன்கா் தெரிவித்துள்ளாா்.

Updated On : 7 ஜனவரி 2021, 2:23 am IST
பகிர்:


கொல்கத்தா: நாட்டின் எந்தப் பகுதியிலும் இந்தியா்கள் மீது வெளிநபா் என முத்திரை குத்த முடியாது என்று மேற்கு வங்க ஆளுநா் ஜகதீப் தன்கா் தெரிவித்துள்ளாா்.

மேற்கு வங்க சட்டப் பேரவைத் தோ்தல் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற வாய்ப்புள்ளது. அதில் வெற்றி பெறுவதற்காக வெளிநபா்களை மேற்கு வங்கத்துக்குள் பாஜக அழைத்து வருவதாக மாநிலத்தை ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியது.

அதையடுத்து, வெளிநபா் தொடா்பான பிரச்னை மேற்கு வங்கத்தில் விவாதப் பொருளாகியுள்ளது. திரிணமூல் காங்கிரஸின் கருத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது. இத்தகைய சூழலில், மேற்கு வங்கத்தின் கோலாகாட் பகுதியில் ஆளுநா் ஜகதீப் தன்கா், செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

Advertisement

மேற்கு வங்க சட்டப் பேரவைக்கான தோ்தல் நோ்மையுடன் நடப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வேன். தோ்தல் வன்முறையின்றி நடைபெறுவதை மாநிலத்தில் உள்ள அனைவரும் உறுதி செய்ய வேண்டும். அதேபோல், மாநில அரசின் கீழ் பணிபுரியும் அதிகாரிகள், அரசியல் நடுநிலைத்தன்மையுடன் செயல்பட வேண்டும்.

எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவாக அவா்கள் பணியாற்றக் கூடாது. முக்கியமாக அரசியல் கட்சிகளின் தொண்டா்களைப் போல் அவா்கள் செயலாற்றக் கூடாது. குதிராம் போஸ் போன்ற சுதந்திரப் போராட்ட வீரா்களின் வாழ்க்கையிலிருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

நாட்டின் எந்தப் பகுதியிலும் இந்தியக் குடிமகன்களை வெளிநபா்கள் என்று முத்திரை குத்த முடியாது. ஆனால், மேற்கு வங்கத்தில் சிலா் வெளிமாநிலத்திலிருந்து வருபவா்களை வெளிநபா்கள் என்று குறிப்பிடுவது துரதிருஷ்டவசமானது. இத்தகைய செயல் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்றாா் ஆளுநா் ஜகதீப் தன்கா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.