கர்நாடகத்தில் 5 மாவட்டங்களில் கரோனா பரவல் அதிகரிப்பு
பெங்களூரு நகர்ப்புறத்தைத் தவிர கர்நாடகத்தில் 5 மாவட்டங்களில் கரோனா பரவல் அதிகரித்துள்ளது.
பெங்களூரு நகர்ப்புறத்தைத் தவிர கர்நாடகத்தில் 5 மாவட்டங்களில் கரோனா பரவல் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் கே.சுதாகர் புதன்கிழமை செய்தியாளர்களிடம் பேசியதாவது:
பெங்களூரு நகர்ப்புறத்தைத் தவிர மேலும் ஐந்து மாவட்டங்களில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை கவனத்தில் கொண்டு சுகாதாரத்துறை செயல்பட்டு வருகிறது.
குறிப்பிட்ட அந்த மாவட்ட நிர்வாகங்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளோம். பெங்களூரு உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு அதிகளவில் தடுப்பூசிகள் அனுப்பப்பட்டுள்ளன. கரோனா பரிசோதனையை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மைசூருவில் இன்னும் சில கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏனெனில் மைசூரு, கலாபுராகி, துமகுரு மற்றும் பிதர் ஆகிய பகுதிகளிலும் தொற்று பரவல் அதிகரித்துள்ளது.
தனியார் மருத்துவமனைகளில் மொத்த படுக்கைகளில் 20 சதவீதம் கரோனா நோயாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.
கர்நாடகத்தில் செவ்வாய்க்கிழமை 6,150 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் மொத்த பாதிப்பு 45,107 ஆக உள்ளதாகவும் சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.