தில்லியில் வார இறுதி நாள்களில் ஊரடங்கு: கேஜரிவால்
தில்லியில் வார இறுதி நாள்களில் ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்க முடிவு செய்துள்ளதாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அறிவித்துள்ளார்.
தில்லியில் வார இறுதி நாள்களில் ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்க முடிவு செய்துள்ளதாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அறிவித்துள்ளார்.
அதிகரித்து வரும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
நாட்டில் பல்வேறு மாநிலங்களில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அந்தவகையில் தில்லியிலும் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 17 ஆயிரத்திற்குமதிகமானோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. கரோனா பரவல் அதிகரித்ததால், வார இறுதி நாள்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக அரவிந்த் கேஜரிவால் அறிவித்துள்ளார்.
வார இறுதி நாள்களில் பொதுமக்கள் வெளியே நடமாடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், அத்தியாவசிய பணிகளுக்காக போக்குவரத்து இயங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
வாரக் கடைசி நாள்களில் செயல்பட்டு வந்த சந்தைகள் இனி வார நாள்களில் செயல்படும் என்றும், சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் திரையரங்குகள், வணிக வளாகங்கள் இயங்காது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
வார இறுதி நாள்களில் உணவகங்களில் அமர்ந்து சாப்பிடக் கூடாது, பார்சலுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.