ஆக்ஸிஜன் வழங்குவதில் பாகுபாடு: ராஜஸ்தான் அமைச்சர் குற்றச்சாட்டு
மாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் வழங்குவதில் மத்திய அரசு பாகுபாடு காட்டுவதாக ராஜஸ்தான் சுகாதாரத் துறை அமைச்சர் ரகு சர்மா திங்கள்கிழமை குற்றம்சாட்டினார்.
மாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் வழங்குவதில் மத்திய அரசு பாகுபாடு காட்டுவதாக ராஜஸ்தான் சுகாதாரத் துறை அமைச்சர் ரகு சர்மா திங்கள்கிழமை குற்றம்சாட்டினார்.
இதுபற்றி அவர் கூறியது:
"ராஜஸ்தான் மற்றும் குஜராத் இரண்டு மாநிலங்களிலும் கரோனா தொற்றின் தீவிரம் சமமாக உள்ளது. ஆனால், குஜராத்துக்கு 1,200 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் வழங்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானுக்கு 124 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. போதுமான அளவுக்கு ஆக்ஸிஜன் வழங்காவிட்டால் உயிர்களை எப்படி காப்பாற்றுவது.
Advertisement
தடுப்பூசிக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தானுக்கு ஒருநாளைக்கு 7 லட்சம் கரோனா தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன. பிரதமருக்கும், மத்திய சுகாதாரத் துறை அமைச்சருக்கும் ராஜஸ்தான் அரசு கடிதம் எழுதியது. அதன்பிறகு, மாநிலத்துக்கு 14 லட்சம் தடுப்பூசிகள் கிடைத்தன. அவை இரண்டு நாள்களுக்குப் பயன்படுத்தப்படும்.
மாநிலத்திடம் முழு சேமிப்புத் திறனும் உள்ளது. 15 நாள்களுக்குத் தேவையான தடுப்பூசிகளை வழங்க வேண்டும். அது பல்வேறு உயிர்களைக் காக்கும். அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கான அனுமதியை வழங்கிட வேண்டும்."
ராஜஸ்தானில் கடந்த ஏப்ரல் 1 முதல் 18 வரை மட்டுமே 131 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இதுவே மார்ச் முழுவதிலும் வெறும் 31 பேர் மட்டுமே நோய்த் தொற்றுக்கு பலியாகியிருந்தனர்.
ராஜஸ்தானில் இதுவரை மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 4,14,617 ஆக உயர்ந்துள்ளது. 3,151 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.