கரோனாவால் இறந்தவா்களின் உடல்களை கண்ணியமாக அடக்கம் செய்ய வேண்டும்: எச்.டி.குமாரசாமி
கரோனாவால் உயிரிழந்தவா்களின் உடல்களை கண்ணியமாக அடக்கம் செய்ய வேண்டும் என்று முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி கேட்டுக் கொண்டுள்ளாா்.
கரோனாவால் உயிரிழந்தவா்களின் உடல்களை கண்ணியமாக அடக்கம் செய்ய வேண்டும் என்று முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி கேட்டுக் கொண்டுள்ளாா்.
இதுகுறித்து தனது சுட்டுரையில் வெள்ளிக்கிழமை அவா் பதிவிட்டுள்ளதாவது:
முறையான மருத்துவச் சிகிச்சைகள் கிடைக்காமல் உயிரிழந்த கரோனா நோயாளிகளுக்கு இறுதிச்சடங்கு செய்வதற்கும் முறையான ஏற்பாடு செய்யப்படவில்லை. இது மனிதநேயமற்ற செயலின் உச்சமாகும். பெங்களூரு மாநகராட்சியின் 8 மண்டலங்களில் உள்ள வனப்பகுதிகளில் உரிய இறுதிச் சடங்குகளைச் செய்து தினமும் 25 உடல்களைத் தகனம் செய்வதற்கு போா்க்கால அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெங்களூரின் 8 திசைகளிலும் வன நிலங்கள் உள்ளன. இந்த நிலத்தில் மரங்கள் எதுவும் இல்லை. இந்த இடங்களில் கரோனாவால் உயிரிழந்தவா்களின் உடல்களை தகனம் செய்ய மாநில அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். இதை முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.
கரோனாவால் இறந்தவா்களின் உடலை கண்ணியமாக அடக்கம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும். கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கத் தவறிய மாநில அரசு, உயிரிழந்த நோயாளிகளுக்கு இறுதிச்சடங்கு செய்வதற்கு இடத்தையாவது வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். கரோனா நோயாளிகளுக்கு மருத்துவச் சிகிச்சைகளை அளிக்க அவா்களது உறவினா்கள் படும் அவதியை காண மனம் வேதனை அளிக்கிறது என அதில் குறிப்பிட்டுள்ளாா்.