தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்
தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் யார் தில்லி சென்றாலும், முதல்வர் ஸ்டாலின் பயப்படுவதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளதைப் பற்றி...
தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் யார் தில்லி சென்றாலும், முதல்வர் ஸ்டாலின் பயப்படுவதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன், வெள்ளிக்கிழமை (மார்ச் 20) காலை செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், “தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தில்லி தலைவர்களைச் சந்திப்பதற்காக செல்லவிருக்கிறேன். முதல்வர் ஸ்டாலினைப் போல, கூட்டணியின் தலைவர் எடப்பாடி பழனிசாமி இருக்கும்போது, தில்லிக்குச் செல்வது ஏன் எனக் கேட்கிறீர்கள்.
Advertisement
எங்கள் கூட்டணியின் தமிழ்நாடு தலைவர் எடப்பாடி பழனிசாமியுடன் தொகுதிப் பங்கீடு சம்பந்தமாக பேசுவதற்காக தில்லி செல்கிறேன். அகில இந்தியளவில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதன்மைத் தலைவர் அமித் ஷா. தொகுதிப் பங்கீடு தொடர்பாக அண்ணன் பழனிசாமி, அவரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்.
எனக்கு நான்கு நாள்களுக்கு முன்னதாகவே அழைப்பு வந்துவிட்டது. பாஜக மேலிடத் தலைவர்களை சந்திக்க தில்லி செல்கிறேன். தமிழ்நாட்டுக்கான நிதியைப் பெற்றுத்தருவதற்காக அவர்கள் தில்லிக்குச் செல்லவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், மாநிலத்துக்கான நிதியைப் பெற்றுத்தர முடியுமா?.
அதைவிட தில்லி எவ்வளவு நிதி கொடுத்தாலும், அதை கபளீகரம் செய்வதைத் தான் திமுக அரசு செய்கிறது. முதல்வர் சும்மா சும்மா தில்லி... தில்லி... என்கிறார். தில்லிக்கும் தமிழ்நாட்டுக்கும் போட்டி என முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். ஆனால், அதிமுகவுக்கும் திமுகவுக்கும் தான் நேரடி போட்டி நிலவுகிறது.
2004, 2024 ஆம் ஆண்டுகளில் பணம் கொழிக்கும் மத்திய அமைச்சரவையில் துறைகளை வாங்கி தமிழ்நாட்டுக்கு அவப் பெயரை உருவாக்கினார். காங்கிரஸுடன் கூட்டணியில் இருந்தபோதுதான் நீட் தேர்வு அறிவிக்கப்பட்டது. இலங்கையில் உள்ள தொப்புள்கொடி உறவுகள் லட்சக்கணக்கில் கொல்லப்பட்டபோது அமைதியாக இருந்தது திமுக அரசு.
தில்லிக்கு நாங்கள் சென்றாலே பயத்தில் பேசுகிறார் முதல்வர் ஸ்டாலின். தொகுதிப்பங்கீடு முடிவுகள் இன்னும் 4 நாள்களில் சுமுகமாக எடுக்கப்படும்” என்றார் டிடிவி தினகரன்.