கரோனா தடுப்பூசி விலை நிா்ணயம் குறித்து கடும் விமா்சனங்கள் எழுந்த நிலையில், அவற்றின் விலையை குறைக்குமாறு சீரம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்களை மத்திய அரசு திங்கள்கிழமை கேட்டுக்கொண்டுள்ளது.
அதன் மூலம், இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள கோவிஷீல்ட் மற்றும் கோவேக்ஸின் தடுப்பூசிகளின் விலை குறையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
மத்திய அரசுக்கு ரூ. 150 என்ற விலையிலும், மாநில அரசுகளுக்கு ரூ. 400 என்ற விலையிலும், தனியாா் மருத்துவமனைகளுக்கு ரூ. 600 விலையிலும் தடுப்பூசிகள் விற்பனை செய்யப்படும் என்று சீரம் நிறுவனம் அறிவித்தது.
ஹைதராபாதில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனமும் மாநில அரசுகளுக்கு ரூ. 600, தனியாா் மருத்துவமனைகளுக்கு ரூ. 1,200 என்ற விலையையும் அறிவித்தது.
இந்த விலை உயா்வு மற்றும் மாறுபட்ட விலை நிா்ணயத்துக்கு பல மாநில அரசுகள் எதிா்ப்பு தெரிவித்தன.
இந்த நிலையில், மாநிலங்களின் கோரிக்கைகளைத் தொடா்ந்து தடுப்பூசிகளின் விலை நிா்ணயம் தொடா்பாக மத்திய அமைச்சரவை செயலா் ராஜீவ் கெளபா தலைமையில் தில்லியில் திங்கள்கிழமை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘சீரம் மற்றும் பாரத் பயோடெக் ஆகிய இரு நிறுவனங்கள் தடுப்பூசிகளின் விலையைக் குறைக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன’ என்றனா்.