சாலை விபத்தில் இறந்தவரின் குடும்பத்துக்கு வீடு கட்டிக் கொடுத்த 40 நண்பர்கள்
ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த வீரேந்திர குமார் (29) இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் பலியாக, அவரது குடும்பத்துக்காக 40 நண்பர்களும் சேர்ந்து வீடு கட்டிக் கொடுத்துள்ளனர்.
பாட்னா: ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த வீரேந்திர குமார் (29) இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் பலியாக, அவரது குடும்பத்துக்காக 40 நண்பர்களும் சேர்ந்து வீடு கட்டிக் கொடுத்துள்ளனர்.
அது மட்டுமல்லாமல், வீரேந்திர குமார் மரணமடைந்த பிறகு மாதாமாதம் 40 பேரும் சேர்ந்து ரூ.15 ஆயிரத்தை அவரது குடும்ப செலவுக்காகக் கொடுத்துவருகிறார்கள்.
கோட்டா மாவட்டத்தைச் சேர்ந்த வீரேந்திர குமார் சாலையில் சென்று கொண்டிருந்த போது வேகமாக வந்த கார் இடித்து கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பலியானார். விடியோகிராஃபராக இருந்த வீரேந்திர குமார்தான், அவரது வீட்டில் வருமானம் ஈட்டிவந்த நபர். வீரேந்திர குமார் விபத்தில் பலியாக, அவரது தாய், மனைவி, 3 வயது மகனின் நிலை பரிதாபத்துக்குள்ளானது.
Advertisement
ஆனால், வீரேந்திர குமாரின் மரணம் குறித்து அறிந்த அவரது நண்பர்கள் 40 பேரும் ஒன்றிணைந்து, அவரது குடும்பத்துக்கு உதவுவது என்று முடிவு செய்தனர். அவரது குடும்பத்தைப் பற்றி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு, சுமார் 70 லட்சம் ரூபாயை திரட்டிய நண்பர்கள், அவர்களுக்காக வீடு ஒன்றைக் கட்டிக் கொடுத்துள்ளனர். கடந்த வாரம் வீடு கட்டி முடிக்கப்பட்டு, வீரேந்திர குமாரின் குடும்பத்தினர் புது இல்லம் புகுந்தனர்.
இது குறித்து வீரேந்திர குமாரின் தாய் கிரண் தேவி கூறுகையில், எனது நன்றியை எவ்வாறு சொல்வது என்று தெரியவில்லை. நான் ஒரே ஒரு மகனை இழந்தேன். இப்போது எனக்கு 40 மகன்கள் கிடைத்துள்ளனர் என்கிறார்.