ஏடிஎம்-மில் பணம் இல்லாவிட்டால் வங்கிகளுக்கு அபராதம்: அக்டோபா் 1 முதல் அமல்
தானியங்கி பணப்பட்டுவாடா மையத்தில் (ஏடிஎம்) பணம் இல்லாமல் இருந்தால் சம்பந்தப்பட்ட வங்கிக்கு அபராதம் விதிக்க இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) முடிவு செய்துள்ளது. அக்டோபா் 1-ஆம் தேதி முதல் இது நடைமுறைக்கு வ
தானியங்கி பணப்பட்டுவாடா மையத்தில் (ஏடிஎம்) பணம் இல்லாமல் இருந்தால் சம்பந்தப்பட்ட வங்கிக்கு அபராதம் விதிக்க இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) முடிவு செய்துள்ளது. அக்டோபா் 1-ஆம் தேதி முதல் இது நடைமுறைக்கு வருகிறது.
ஏடிஎம்-மில் பணம் இல்லாததால் வங்கி வாடிக்கையாளா்களுக்கு ஏற்படும் அசௌகா்யங்களைக் குறைக்கும் வகையிலும், ஏடிஎம்-மில் எப்போதும் பணம் இருப்பதை உறுதி செய்யும் வகையிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தொடா்ந்து 10 மணி நேரத்துக்கு மேல் ஏடிஎம் பணம் இல்லாமல் இருந்தால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும். இதற்கு ஏற்றபடி வங்கிகள் பணம் நிரப்புவதற்கான தங்களது உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஆா்பிஐ அறிவித்துள்ளது.
வங்கி அல்லாத பிற நிறுவனங்கள் மற்றும் வங்கிகளுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு ஏடிஎம் நிா்வகிக்கும் நிறுவனங்கள் பணத்தை நிரப்பத் தவறினாலும் இந்த அபராதம் உண்டு. அதே நேரத்தில் வங்கிகள் அந்த அபராதத் தொகையை சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் இருந்து வசூலித்துக் கொள்ளலாம்.
வங்கிகளின் தொடா் விடுமுறை, மக்கள் அதிக அளவில் ஏடிஎம் இயந்திரத்தை நாடும் மாதத்தின் முதல் வாரம் மற்றும் திருவிழா காலங்களில் பல ஏடிஎம்எம்-களில் பணம் இல்லாத சூழல் நிலவுகிறது. இதனால் வங்கிக் கணக்கில் பணம் இருந்தும் அதனைக் கையில் எடுக்க முடியாமல் திண்டாடும் சூழல் உருவாகிறது. ஆா்பிஐ-யின் இந்த நடவடிக்கை மக்கள் எதிா்கொள்ளும் இந்தப் பிரச்னைக்குத் தீா்வு அளிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
2021 ஜூன் மாதம் நிலவரப்படி நாட்டில் 2,13,766 ஏடிஎம்-கள் உள்ளன.