ஹிமாச்சலப் பிரதேசம் நிலச்சரிவில் சிக்கி மண்ணுக்குள் புதைந்தவர்களில் 13 சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக இந்தோ-திபெத் எல்லைப் படையினர் தெரிவித்துள்ளனர்.
கின்னூர் மாவட்டம் ரெகாங் பியோ-சிம்லா நெடுஞ்சாலையில் நேற்று (புதன்கிழமை) மதியம் 12:45 மணி அளவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அப்போது, அவ்வழியே 40-க்கும் அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்ற அரசுப் பேருந்து, டிரக் உள்ளிட்ட சில வாகனங்கள் இடிபாடுகளில் சிக்கியது.
இந்நிலையில், மண்ணுக்குள் புதைந்த வாகனங்களில் இருப்பவர்களை மீட்க இந்தோ - திபெத் எல்லை படையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் இணைந்து சம்பவ இடத்தில் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுவரை இடிபாடுகளில் சிக்கிய 13 பேரை உயிருடனும், 13 பேரை சடலமாகவும் மீட்டுள்ளதாக இந்தோ-திபெத் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், மண்ணுக்குள் புதைந்த பேருந்து மற்றும் ஜீப்பில் இருந்தவர்களில் உடல்கள் மீட்கும் பணி தொடர்ந்து இரண்டாவது நாளாக நடைபெற்று வரும் நிலையில், பலியானோர் எண்ணிக்கை உயரக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.