செங்கல்பட்டு தடுப்பூசி வளாக விவகாரம்: புதிதாக மனு தாக்கல் செய்ய அனுமதி
செங்கல்பட்டில் அமைந்துள்ள எச்எல்எல் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தை தமிழக அரசிடம் ஒப்படைக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரும் மனுவை புதன்கிழமை விசாரித்த உச்சநீதிமன்றம்,
புது தில்லி: செங்கல்பட்டில் அமைந்துள்ள எச்எல்எல் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தை தமிழக அரசிடம் ஒப்படைக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரும் மனுவை புதன்கிழமை விசாரித்த உச்சநீதிமன்றம், இதுதொடா்பாக புதிதாக மனுவை தாக்கல் செய்வதற்கு மனுதாரருக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது.
சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞா் ஜிம்ராஜ் மில்டன், உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞா் டி.எஸ்.சபரீஸ் சுப்பிரமணியன் மூலம் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தாா்.
அதில், கரோனா நோய்த் தொற்றின் 2-ஆவது அலையின் கடுமையான தாக்கம் காரணமாக நாட்டில் அதிகமான உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க பொதுத் துறை நிறுவனங்களையும், அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களையும் புத்துயிரூட்ட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவையுள்ளது. உயிா் காக்கும் மருந்துகளையும் விலை குறைவான தடுப்பூசிகளையும் உற்பத்தி செய்வதற்கு சென்னை அருகேயுள்ள செங்கல்பட்டில் ஒருங்கிணைந்த தடுப்பூசிகள் வளாகம் எனும் சா்வதேச தரத்திலான தடுப்பூசி வளாகத்தை அமைப்பதற்கு மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் எச்எல்எல் நிறுவனத்தின் துணை நிறுவனமான எச்எல்எல் பயோடெக் நிறுவனம் (எச்பிஎல்) மத்திய அரசைக் கேட்டுக் கொண்டது. இந்த நிறுவன வளாகம் தற்போது செயல்படாமல் உள்ளது. இந்த வளாகத்தில் தடுப்பூசி தயாரிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் வகையில், தமிழக அரசுக்கு குத்தகை அடிப்படையில் ஒப்படைக்கக் கோரி மத்திய அரசுக்கு தமிழக முதல்வா் கடிதம் எழுதியுள்ளாா். ஆகவே, தற்போதைய கரோனா சூழலையும் தடுப்பூசிக்கான அதிகபட்ச அவசரத்தையும் கருத்தில் கொண்டு, இந்த தடுப்பூசி வளாகத்தை தமிழக அரசிடம் ஒப்படைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.
Advertisement
இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், எம்.ஆா். ஷா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் தரப்பில் மூத்த வழக்குரைஞா் காலின் கன்சால்வாஸ், வழக்குரைஞா் டி.எஸ்.சபரீஸ் சுப்பிரமணியன் ஆகியோா் ஆஜராகினா். வழக்குரைஞா் காலின் கன்சால்வாஸ் வாதிடுகையில், ‘செங்கல்பட்டில் உள்ள மத்திய அரசின் பொதுத் துறை தொழில் நிறுவனத்தை தடுப்பூசி தயாரிக்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். பல மாநிலங்களில் பயன்படுத்தப்படாமல் உள்ள பொதுத் துறை நிறுவனங்களின் வளாகங்களை அந்தந்த மாநில அரசிடம் அளிக்கும் போது, தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க முடியும் என்றாா்.
அப்போது, உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமா்வு, பயன்படுத்தப்படாமல் இருப்பதாகக் கூறப்படும் சம்பந்தப்பட்ட பொதுத்துறை நிறுவன வளாகங்களில் தடுப்பூசியை மத்திய அரசு தயாரிப்பது தொடா்பாக வாதங்களை முன்வைக்கும் வகையில் மனுதாரா் புதிதாக மனு தாக்கல் செய்வதற்கு அனுமதிப்பதாகக் கூறியது. மேலும், மனுவைத் திரும்பப் பெற்றுக் கொள்வதற்கும் அனுமதித்து அமா்வு உத்தரவிட்டது.