ஏழு தலைமுறை சுற்றம்...
ஏழு தலைமுறை வம்சாவளி உறவினர்களின் பெயர்கள் அகிலன்- ரம்யா திருமண அழைப்பிதழில் அச்சிட்டப்பட்டுள்ளது பேசுபொருளாகியுள்ளது.
ஏழு தலைமுறை வம்சாவளி உறவினர்களின் பெயர்கள் அகிலன்- ரம்யா திருமண அழைப்பிதழில் அச்சிட்டப்பட்டுள்ளது பேசுபொருளாகியுள்ளது. சேலம் மாவட்டத்துக்கு உள்பட்ட வாழப்பாடி அருகே துக்கியாம்பாளையம் கிராமத்தில் "கமலாலயம்' என்ற குழந்தைகள் காப்பகத்தை நிர்வகிக்கும் ஆதிராஜன்- சிறப்பு ஆசிரியை கௌரி தம்பதியினர் அச்சிட்டு விநியோகித்த இந்தப் புதுமையான அழைப்பிதழுக்கு வரவேற்பும், பாராட்டும் குவிகின்றன.
நெருங்கிய ரத்த உறவுகளின் பெயர்களைக்கூட குறிப்பிட மனமில்லாமல், "சுற்றமும் நட்பும்' என்று அழைப்பிதழ்களை இன்றைய உலகில் அச்சிடுவோர் மத்தியில், சேயோன் முதல் பெயரன்கள் வரையில் ஏழு தலைமுறை வம்சாவளி உறவினர்களின் பெயர்களை பட்டியல் போட்டுள்ள ஆதிராஜனிடம் பேசியபோது:
'நவீன நாகரிகத்துக்கேற்ப திருமணம் நடந்தேறும் முறைகள் மட்டுமின்றி, திருமண அழைப்பிதழ்களும் மாறி விட்டன. மணமக்களின் பெயர், மண விழா நிகழ்விடம், தேதி, நேரம் மட்டுமே பலரது அழைப்பிதழ்களில் இடம்பெறுகின்றன. பலர் தங்களது பெற்றோரின் பெயர்களையும்கூட அச்சிடுவதில்லை. குறிப்பாக இளைஞர்கள் பலர், சமூக ஊடகங்கள் வாயிலாக காணொலிகளாக திருமண அழைப்பிதழ்களை அனுப்பி வைக்கின்றனர்.
Advertisement
Advertisement
எனது மகன் பொறியாளர் ஆ.அகிலனுக்கும், சென்னை சரவணக்குமார்- ரதி தம்பதியின் மகள் மென்பொறியாளர் ரம்யாவுக்கும் திருமணம் நிச்சயமாகி, அரக்கோணம் அருகே ஏப்ரல் 6-இல் திருமணம் நடைபெறவுள்ளது. இந்தத் திருமண நிகழ்ச்சிக்காக உறவினர்கள், நண்பர்களை அழைக்க தயாரிக்கப்பட்ட அழைப்பிதழில், மணமக்களின் சேயோன்-
சேயோள், ஓட்டன்-ஓட்டி, பூட்டன்-பூட்டி, பாட்டன்-பாட்டி என வம்சாவளியின் ஏழு தலைமுறை உறவினர்கள் அனைவரது பெயர்களையும் பட்டியலிட்டு அச்சிட்டுள்ளோம்.
தற்கால இளைய சமூகத்தினர் பரம்பரை, பாரம்பரியம், முன்னோர்கள், உறவினர்களை அறிந்துகொள்வதில் ஆர்வம் காட்டுதில்லை. எனவே, முன்னோர்கள், உறவினர்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் நோக்கில், ஒரு மாதம் முயற்சி செய்து ஏழு தலைமுறை வம்சாவளி உறவினர்களின் பெயர்களை எனது மகனின் திருமண அழைப்பிதழில் அச்சிட்டு உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்குக் கொடுத்து அழைத்து வருகிறேன்' என்கிறார் ஆதிராஜன்.