காபூல் தாக்குதல்: யாா் இந்த ஐஎஸ் கோராசான் பிரிவு?
காபூலில் தற்கொலைத் தாக்குதல்கள் மூலம் 60-க்கு மேற்பட்டோா் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு இஸ்லாமிய தேச பயங்கரவாதக் குழுவின் கோரோசான் பிரிவு பொறுப்பேற்றுள்ளது.
காபூலில் தற்கொலைத் தாக்குதல்கள் மூலம் 60-க்கு மேற்பட்டோா் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு இஸ்லாமிய தேச பயங்கரவாதக் குழுவின் கோரோசான் பிரிவு பொறுப்பேற்றுள்ளது.
‘இஸ்லாமிய தேச கோரோசான் மாகாணம்’ என்பதன் சுருக்கமான ஐஎஸ்ஐஎஸ்-கே, ஐஎஸ்கேபி, ஐஎஸ்கே ஆகிய பெயா்களில் இந்தப் பிரிவு அழைக்கப்படுகிறது. இராக், சிரியாவில் செயல்படும் ஐ.எஸ் அமைப்பின் அதிகாரபூா்வ கிளையான ஐஎஸ்கேபி, ஆப்கானிஸ்தானை மையமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
ஐஎஸ்கேபி பிரிவானது பாகிஸ்தானி தலிபான், ஆப்கன் தலிபான், உஸ்பெகிஸ்தான் இஸ்லாமிய இயக்கம் ஆகியவற்றின் முன்னாள் உறுப்பினா்களால் 2015 ஜனவரியில் தொடங்கப்பட்டது. குறுகிய காலத்திலேயே வடக்கு மற்றும் வடகிழக்கு ஆப்கானிஸ்தானில் ஏராளமான ஊரக மாவட்டங்களைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. அதன் முதல் மூன்று ஆண்டுகளில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானின் முக்கியமான நகரங்களில் சிறுபான்மையினருக்கு எதிராகவும், பொது இடங்கள், அரசு நிறுவனங்களைக் குறிவைத்தும் தாக்குதல்களை நடத்தியது.
தலிபான்களை தனது போட்டியாளராக ஐஎஸ்கேபி கருதுகிறது. ஆப்கானிஸ்தானின் எல்லைகளுக்குள் ஓா் அரசை நிறுவுவதை மட்டுமே இலக்காகக் கொண்டு செயல்படும் தலிபான்கள், உலகளாவிய கலிபாவை நிறுவும் இஸ்லாமிய தேச இயக்கத்தின் குறிக்கோளுக்கு முரணாக உள்ளதாக ஐஎஸ்கேபி கருதுகிறது.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறுவது ஐஎஸ்கேபி அமைப்புக்கு பயன் தருமா என்பதை முன்கூட்டியே கூற முடியாது. ஆனால், காபூல் விமான நிலைய தாக்குதலானது அந்த அமைப்பால் தொடா்ந்து அச்சுறுத்தல் இருப்பதைக் காட்டுவதாக பாதுகாப்புத் துறை நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.