நாக்பூர் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்குவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் நாக்பூர் நெடுஞ்சாலையில் இன்று காலை லாரி - கார் இரண்டும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் சம்பவ இடத்திலேயே 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 7 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்த நிலையில், விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்தவர்கள் அனைவரும் மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜயினைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. இந்நிலையில், மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான், உயிரிழந்த 11 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்குவதாக அறிவித்துள்ளார். மேலும் படுகாயமடைந்தவர்களுக்கான சிகிச்சை செலவை அரசே ஏற்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதன் தொடர்ச்சியாக, நாக்பூர் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ. 2 லட்சம் இழப்பீடும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 இழப்பீடும் வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.