ஹெலிகாப்டர் விபத்து: குன்னூர் விரைகிறார் விமானப்படை தலைமைத் தளபதி
குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் ராணுவ உயர் அதிகாரிகள் சென்ற விமானப்படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான பகுதிக்கு விமானப்படைத் தளபதி வி.ஆர்.செளதரி செல்லவுள்ளார்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் ராணுவ உயர் அதிகாரிகள் சென்ற விமானப்படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான பகுதிக்கு விமானப்படை தலைமைத் தளபதி விவேக் ராம் செளதரி செல்லவுள்ளார்.
விபத்தில் சிக்கிய ராணுவ ஹெலிகாப்டரில் முப்படைகளின் தலைமைத் தளபதி விபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் உயரதிகாரிகள் என 14 பேர் பயணித்தனர்.
படிக்க | ஹெலிகாப்டர் விபத்து நடந்தது எப்படி?
வெலிங்டன் ராணுவக் கல்லூரியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவதற்காக கோவையிலிருந்து இரண்டு ஹெலிகாப்டர்கள் முற்பகல் 11.47 மணிக்கு புறப்பட்டுச் சென்றன. இந்த இரு ஹெலிகாப்டர்களில் ஒன்றுதான் விபத்தில் சிக்கியது. இந்த விபத்து பிற்பகல் 12.20 மணிக்கு நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்து நடைபெற்ற இடத்திற்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வருகை புரியவுள்ளார். அதேபோன்று விமானப்படைத் தலைமைத் தளபதி வி.ஆர்.செளதரியும் விபத்து நடைபெற்ற குன்னூர் பகுதிக்கு செல்லவுள்ளதாக விமானப்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹெலிகாப்டர் விபத்து விவரம்:
ஹெலிகாப்டர் விபத்தில் 10 பேரின் உடல்கள் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன. நான்கு பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் பட்டியலில் பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் ஆகியோர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேகமூட்டம் காரணமாக தாழ்ந்து பறந்த ஹெலிகாப்டர், மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.