கோவாவில் திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியமைத்தால், மாநிவ மகளிருக்கு மாதம் ரூ.5,000 ஆயிரம் வீதம் வழங்கப்படும் என அக்கட்சி சனிக்கிழமை வாக்குறுதியளித்தது.
இதுகுறித்து திரிணமூல் காங்கிரஸ் தலைவா் மஹுவா மொய்த்ரா எம்.பி. கூறியது:
கிருஹலட்சுமி என்று பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின்கீழ், ஒவ்வொரு குடும்பத்தைச் சோ்ந்த பெண்ணுக்கும் பணவீக்கத்தை சமாளிக்கும் பொருட்டு, உறுதியளிக்கப்பட்ட வருமான ஆதரவாக மாதம் ரூ.5,000 பரிமாற்றம் செய்யப்படும்.
இத்திட்டத்துக்கான அட்டைகள் விரைவில் விநியோகிக்கப்படும். அந்த அட்டையில் தனித்துவ அடையாள எண்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். கோவாவில் திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியமைத்ததும் இந்த அட்டை செயல்படத் தொடங்கும்.
ஏற்கெனவே கிருஹ ஆதாா் திட்டத்தின்கீழ் மகளிருக்கு கோவா மாநில பாஜக அரசு ரூ.1,500 நிதியுதவி அளித்து வந்தாலும், வருமான உச்சவரம்பு காரணமாக அந்தத் திட்டத்தின்கீழ் 1.5 லட்சம் குடும்பத்தினா் மட்டுமே பயன்பெறுகின்றனா். ஆனால், திரிணமூல் காங்கிரஸின் கிருஹ லட்சுமி திட்டத்தின்கீழ், மாநிலத்தில் 3.5 லட்சம் குடும்பங்களைச் சோ்ந்த பெண்கள் பயன்பெறுவா்.
திரிணமூல் காங்கிரஸின் திட்டத்தை செயல்படுத்த கோவாவின் மொத்த நிதிநிலை அறிக்கையில் 6-8 சதவீத நிதி போதுமானது. நாட்டின் பொருளாதாரத்தை கரோனா பரவல் முடக்கிவிட்டதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே பொருளாதாரத்தை மீட்டெடுப்பது அவசியம் என்றாா் அவா்.
முன்னதாக, கோவாவில் அண்மையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கேஜரிவால், கோவாவில் ஆம் ஆத்மி ஆட்சியமைத்தால், கிருஹ ஆதாா் திட்டத்தின்கீழ் மகளிருக்கு வழங்கப்பட்டுவரும் நிதி ரூ.1,500-இலிருந்து ரூ.2,500-ஆக உயா்த்தப்படும் என்றும், இத்திட்டத்தின்கீழ் பயன் பெறாத 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதம் ரூ.1,000 நிதியுதவி அளிக்கப்படும் என்றும் வாக்குறுதியளித்தாா்.
இதேபோல, கடந்த வெள்ளிக்கிழமை கோவா வந்த காங்கிரஸ் பொதுச் செயலாளா் பிரியங்கா வதேரா, மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியமைக்கும்பட்சத்தில், வேலைவாய்ப்பில் மகளிருக்கு 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று வாக்குறுதியளித்தாா்.