பிரதமர் நரேந்திர மோடி டிசம்பர் 13, 14 தேதிகளில் தனது சொந்த தொகுதியானவாராணசிக்கு செல்கிறார்.
டிசம்பர் 13 பகல் 1 மணியளவில், ஶ்ரீகாசி விஸ்வநாதர் கோயிலுக்கு சென்று பிரதமர் வழிபாடு செய்கிறார். பின்னர் அவர், ரூ.339 கோடியில் கட்டப்பட்டுள்ள ஶ்ரீ காசி விஸ்வநாதர் ஆலய வளாகத்தின் முதல் கட்டத்தை தொடங்கி வைக்கிறார். திட்டத்தின் முதல் கட்டத்தில் மொத்தம் 23 கட்டடங்கள் தொடங்கி வைக்கப்படவுள்ளன. இந்த திட்டத்திற்கான பணிகள் 2019 மார்ச் 8-ம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டு தொடங்கின.
முன்பு 3000 சதுர அடிக்குள் சுருங்கியிருந்த வளாகத்தின் அளவை 5 லட்சம் சதுர அடி என்னும் பிரம்மாண்டமான பரப்பளவில் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. கரோனா பெருந்தொற்றுக்கு இடையிலும், திட்டமிட்டபடி குறிப்பிட்ட காலத்திற்குள் திட்டம் முடிக்கப்பட்டுள்ளது. வாரணாசி பயணத்தின் போது, பிரதமர் கால பைரவர் கோயிலுக்கு நண்பகல் 12 மணிக்கு செல்கிறார்.
இதையும் படிக்க- தேசிய நெடுஞ்சாலை 334-பி பணிகளை முன்கூட்டியே முடிக்க இலக்கு: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
பின்னர் டிசம்பர் 13 மாலை 6 மணிக்கு ரோ-ரோ படகில் பயணிக்கும் அவர், கங்கை ஆரத்தியை பார்வையிட உள்ளார். தொடர்ந்து, டிசம்பர் 14 மாலை சுமார் 3.30 மணியளவில், வாரணாசியில் சர்வேத மகாமந்திரில், சத்குரு சதாபல்தியோ விஹாங்கம் யோக் சன்ஸ்தான் 98-வது ஆண்டு கொண்டாட்டத்திலும் பிரதமர் கலந்து கொள்கிறார்.
மேலும் இரண்டு நாள் பயணத்தின் போது, அசாம், அருணாச்சலப் பிரதேசம், கோவா, குஜராத், ஹரியாணா, இமாச்சலப் பிரதேசம், கர்நாடகம், மத்தியப்பிரதேசம், மணிப்பூர், திரிபுரா, உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட் மாநில முதல்வர்கள், பிகார், நாகாலாந்து மாநிலங்களின் துணை முதல்வர்கள் பங்கேற்கும் மாநாட்டில் பிரதமர் பங்கேற்க உள்ளார்.
ஒரே இந்தியா என்னும் பிரதமரின் கண்ணோட்டத்திற்கு மேலும் வலு சேர்க்கும் அரசு சார்ந்த சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பாக இந்த மாநாடு அமையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.