புது தில்லியில் 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு கரோனா: ஆனால்?
கரோனா பாதிப்பு அதிகரித்து, மூன்றாவது அலை எழக்கூடுமோ என்ற அச்சம் நிலவி வரும் சூழலில், புது தில்லியில் வெள்ளிக்கிழமை 180 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
புது தில்லி: கரோனா பாதிப்பு அதிகரித்து, மூன்றாவது அலை எழக்கூடுமோ என்ற அச்சம் நிலவி வரும் சூழலில், புது தில்லியில் வெள்ளிக்கிழமை 180 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகபட்ச பாதிப்பாகும். கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் உறுதியாகும் விகிதமானது 0.29 சதவீதமாக உள்ளது. இது கடந்த ஜூன் 15ஆம் தேதிக்குப் பின் பதிவாகும் அதிகபட்ச உறுதியாகும் விகிதமாகும்.
இதுவரை தில்லியில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 14,42,813 ஆக உள்ளது. இவர்களில் 14.16 லட்சம் பேர் குணமடைந்துவிட்டனர்.
வெள்ளிக்கிழமை கரோனாவால் யாரும் பலியாகவில்லை. இதுவரை டிசம்பர் மாதத்தில் கரோனாவுக்கு 5 பேர் பலியாகியுள்ளனர். இதனால் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 25,103 ஆக உள்ளது.
இந்த அளவுக்கு கரோனா பாதிப்பு அதிகரிக்கக் காரணம் என்ன என்பது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், கரோனா பரிசோதனை அதிகரித்திருப்பதே இதற்குக் காரணம். இங்கிலாந்து, துபையிலிருந்து வரும் பயணிகள் ஏராளமானோருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. கரோனா உறுதியானதும், அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களுக்கும் சோதனை நடத்தப்படுகிறது. இதனால்தான், இந்த அளவுக்கு பாதிப்பு உயர்ந்திருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.