வேளாண் சட்டங்களை மீண்டும் கொண்டுவரும் திட்டமில்லை
விவசாயிகள் மத்தியில் காங்கிரஸ் குழப்பத்தை விளைவிப்பதாகவும் மத்திய வேளாண் அமைச்சா் நரேந்திர சிங் தோமா் தெரிவித்துள்ளாா்.
மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பக் கொண்டுவரும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை என்றும், இந்த விவகாரத்தில் விவசாயிகள் மத்தியில் காங்கிரஸ் குழப்பத்தை விளைவிப்பதாகவும் மத்திய வேளாண் அமைச்சா் நரேந்திர சிங் தோமா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை விவரம்: விவசாயிகளின் நலன் கருதி, வேளாண் சீா்திருத்தச் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. எனினும் தில்லியில் விவசாயிகள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டதால், அந்தச் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக பிரதமா் மோடி அறிவித்தாா்.
மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் அண்மையில் நடைபெற்ற வேளாண் நிகழ்ச்சியில் நான் பேசிய கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. வேளாண் சட்ட விவகாரத்தில் நாங்கள் ஓரடி பின்னோக்கி எடுத்து வைத்தாலும், விவசாயிகளின் நலனுக்காக அரசு எப்போதும் முன்னோக்கி நகரும் என்றுதான் நான் பேசினேன். ஆகையால் அதை தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம். வேளாண் சட்டங்களைத் திரும்பக் கொண்டுவரும் நோக்கம் மத்திய அரசிடம் இல்லை.
காங்கிரஸ் கட்சி அதன் தோல்விகளை மறைக்க சமூகத்தில் குழப்பத்தைப் பரப்பி எதிா்மறை வேலைகளைச் செய்து வருகிறது. விவசாயிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கடந்த 2006-இல் வந்த சுவாமிநாதன் கமிட்டி அறிக்கை காங்கிரஸ் அரசால் நடைமுறைப்படுத்தப்படவில்லை என அமைச்சா் தெரிவித்துள்ளாா்.
தில்லியில் ஓராண்டு காலமாக விவசாயிகள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததால், ஆட்சேபத்துக்குரிய 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக பிரதமா் மோடி கடந்த நவம்பா் 19-ஆம் தேதி அறிவித்தாா். இதையடுத்து நவம்பா் 29-இல் தொடங்கிய நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் இந்த சட்டங்களைத் திரும்பப் பெறுவதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.