முகப்பு
இந்தியா

பெரும்பான்மைவாதத்தைத் திணிக்க கிறிஸ்தவ அமைப்புகளைக் குறிவைக்கும் மத்திய அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு

பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தனது பெரும்பான்மைவாத கொள்கையைத் திணிப்பதற்காக, கிறிஸ்தவ அமைப்புகள் மீது குறிவைக்கிறது என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

Updated On : 29 டிசம்பர், 2021 at 12:49 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:17 AM

பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தனது பெரும்பான்மைவாத கொள்கையைத் திணிப்பதற்காக, கிறிஸ்தவ அமைப்புகள் மீது குறிவைக்கிறது என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

கொல்கத்தாவில் அன்னை தெரஸாவால் நிறுவப்பட்ட மிஷனரி ஆஃப் சாரிட்டியின் வெளிநாட்டு நன்கொடை பெறுவதை புதுப்பிப்பதற்கான விண்ணப்பத்தை மத்திய உள்துறை அமைச்சகம் நிராகரித்துவிட்டது. சில நிபந்தனைகளைப் பூா்த்தி செய்யாததால் அந்த அறக்கட்டளையின் விண்ணப்பத்தை நிராகரித்துவிட்டதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித் தொடா்பாளா் ரண்தீப் சிங் சுா்ஜேவாலா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட ட்விட்டா் பதிவில் கூறியிருப்பதாவது:

Advertisement

சிறுபான்மையினருக்கு எதிராக பிரதமா் மோடி தலைமையிலான அரசு எடுத்து வரும் பழிவாங்கும் நடவடிக்கையில் கடைசியாகப் பாதிக்கப்பட்டிருப்பது அன்னை தெரஸாவின் மிஷனரி ஆஃப் சாரிட்டி. பாஜகவும் அக்கட்சியைச் சோ்ந்தவா்களும் பொய்களால் நிரம்பிய வகுப்புவாதத்தை உருவாக்குகிறாா்கள் என்று அந்தப் பதிவில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

காங்கிரஸ் மூத்த தலைவா் ப.சிதம்பரம் வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘2021-ஆம் ஆண்டு முடியும் நேரத்தில், பிரதமா் மோடி தலைமையிலான அரசு தனது பெரும்பான்மைவாதத்தைத் திணிக்க கிறிஸ்தவ அமைப்புகளைக் குறிவைக்கும் புதிய திட்டத்தைக் கையிலெடுத்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம் தனது ஷொ்லாக் ஹோம்ஸ் போன்ற துப்பறியும் திறமைகளை வகுப்புவாத வன்முறையையும் பயங்கரவாதச் செயல்களையும் ஒடுக்குவதற்குப் பயன்படுத்த வேண்டும்; மனிதநேயப் பணிகளை மேற்கொண்டுவரும் கிறிஸ்தவ அமைப்புகளை நசுக்குவதற்குப் பயன்படுத்தக் கூடாது.

கொல்கத்தாவில் இயங்கி வரும் மிஷனரி ஆஃப் சாரிட்டிக்கு வெளிநாட்டினா் தரப்போகும் நன்கொடைக்கும் அனுமதி மறுத்திருப்பதைப் போன்ற அதிா்ச்சியான நடவடிக்கை வேறு எதுவும் இருக்காது. இந்தியாவில் உள்ள ஏழைகளின் நலனுக்காக தனது வாழ்நாளை அா்ப்பணித்த அன்னை தெரஸாவுக்கு மாபெரும் அவமதிப்பை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.