புது தில்லி: கேரள, மகாராஷ்டிரத்தில் கரோனா தொற்றுப் பரவல் மேலாண்மைக்கான பொது சுகாதார நடவடிக்கைகளை முடுக்கிவிடுவதற்காக மாநில சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட அந்த மாநிலங்களுக்கு இரண்டு உயர்நிலைக் குழுக்களை அனுப்ப மத்திய சுகாதார, குடும்ப நல அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
பெரும்பாலான மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் கரோனா தொற்றின் பாதிப்பும், உயிரிழப்பும் குறைந்து வரும் சூழலில், கேரளத்திலும் மகாராஷ்டிரத்திலும் அதிக பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.
நாட்டில் தற்போது கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 70 சதவீதத்தினர் இந்த இரண்டு மாநிலங்களை மட்டுமே சேர்ந்தவர்கள். மத்திய சுகாதார, குடும்ப நல அமைச்சகத்தின் உயர் அதிகாரிகளும், திருவனந்தபுரத்தின் சுகாதார, குடும்ப நலத்திற்கான மண்டல அலுவலகத்தின் வல்லுநர்களும், புதுதில்லி லேடி ஹார்டிங் மருத்துவ கல்லூரியின் வல்லுநர்களும் கேரளத்திற்குச் செல்லவுள்ள குழுவில் இடம்பெறுவார்கள்.
மத்திய குழுவினர், மாநில சுகாதாரத் துறையுடன் இணைந்து கள நிலவரத்தை அறிந்து, பாதிப்புகளைக் குறைப்பதற்கான பொது சுகாதார நடவடிக்கைகளை பரிந்துரை செய்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.