வேளாண் சந்தைகளை அழிப்பதே பாஜக அரசின் நோக்கம்: ராகுல் காந்தி
விவசாயிகளின் விளைபொருள்களுக்கு நல்ல விலையைக் கிடைக்க விடாமல் வேளாண் சந்தைகளை அழிப்பதே பாஜக அரசின் நோக்கம் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. விமரிசித்துள்ளார்.
விவசாயிகளின் விளைபொருள்களுக்கு நல்ல விலையைக் கிடைக்க விடாமல் வேளாண் சந்தைகளை அழிப்பதே பாஜக அரசின் நோக்கம் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. விமரிசித்துள்ளார்.
கேரளத்தில் வேளாண் சட்டங்கள் மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து ராகுல் காந்தி பேசியது:
"3 புதிய வேளாண் சட்டங்களில் முதல் சட்டம் வேளாண் சந்தையை அழிக்கிறது. இரண்டாவது, பணக்காரர்கள் முடிந்தளவில் தானியங்களைக் கொள்முதல் செய்து அளவே இல்லாமல் பதுக்கி வைப்பதற்கு அனுமதிக்கிறது. இந்த இரண்டு சட்டங்கள் தானியங்கள் மற்றும் காய்கறிகளின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த அனுமதிக்கிறது.
அரசுக்கு ஒரே ஒரு நோக்கம்தான். விவசாயிகளின் விளைபொருள்களுக்கு நல்ல விலை கிடைக்கக் கூடாது. நடுத்தர வர்க்கத்தினர், விவசாயத் தொழிலாளர்கள் என அனைவரும் நிறைய காசு கொடுக்க வேண்டும்.
இதனால்தான் லட்சக்கணக்கான விவசாயிகள் போராடுகின்றனர். பிரதமர் அவர்களை பயங்கரவாதிகள் என்றார்.
சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை குறைவாக உள்ளது. ஆனால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்கிறது. உங்களின் பையிலிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான கோடிக்கணக்கான ரூபாய் பணம் எடுக்கப்படுகிறது. அந்தப் பணம் எங்கே செல்கிறது. அந்தப் பணம் யாரிடம் கொடுக்கப்படுகிறது. நாட்டின் பணக்காரர்களிடம் கொடுக்கப்படுகிறது.
நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் ஒவ்வொரு நாளும் வாகனத்தில் பயணிக்கும்போது மத்திய, மாநில அரசுகள் உங்களது பையிலிருந்து பணத்தை எடுத்து நாட்டின் பணக்காரர்களிடம் கொடுக்கிறது. இந்த அரசியலைத்தான் நாங்கள் மாற்ற விரும்புகிறோம். நாங்கள் ஏழைகளுக்காகப் பணியாற்ற விரும்புகிறோம். அமைப்புகளுக்கோ பணக்காரர்களுக்கோ பணிபுரிய அல்ல. அதுதான் எங்களுக்கும் மற்றவர்களுக்குமான வித்தியாசம்" என்றார் ராகுல்.