முகப்பு
இந்தியா

திஷா ரவிக்கு தில்லி நீதிமன்றம் ஜாமீன்

விவசாயிகள் போராட்டம் தொடர்பாக சமூக ஊடகத்தில் "டூல் கிட்' பகிர்ந்த விவகாரத்தில் கைதாகியுள்ள சூழலியல் ஆர்வலர் திஷா ரவிக்கு ஜாமீன் அளித்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:35 PM
பகிர்:

விவசாயிகள் போராட்டம் தொடர்பாக சமூக ஊடகத்தில் "டூல் கிட்' பகிர்ந்த விவகாரத்தில் கைதாகியுள்ள சூழலியல் ஆர்வலர் திஷா ரவிக்கு ஜாமீன் அளித்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.
 பெங்களூரு சோலே தேவனஹள்ளியைச் சேர்ந்தவர் திஷா ரவி (21). சூழலியல் பெண் ஆர்வலரான இவர், ஸ்வீடனைச் சேர்ந்த கிரேட்டா தன்பர்க் என்ற சூழலியல் ஆர்வலரின் "எதிர்காலத்துக்கான வெள்ளிக்கிழமைகள்' என்ற இயக்கத்தை இந்தியாவில் நடத்தி வருகிறார். தில்லியில் போராடும் விவசாயிகளின் போராட்டத்தைத் தீவிரப்படுத்தி, இந்திய அரசை நிலைகுலைய செய்ய சர்வதேச அளவில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் குறித்து வெளியான "டூல் கிட்'டை திஷா ரவி சமூக ஊடகத்தில் பகிர்ந்த விவகாரத்தில் அவரை தில்லி போலீஸார் கடந்த 13}ஆம் தேதி பெங்களூரில் கைது செய்தனர்.
 இந்த வழக்கில் ஜாமீன் கோரி திஷா ரவி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த ஜாமீன் மனு கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி தர்மேந்தர் ரானா முன் கடந்த சனிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தில்லி போலீஸ்
 தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் ஜாமீன் வழங்க எதிர்ப்புத் தெரிவித்தார்.
 திஷா ரவியின் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் வாதிடுகையில்," திஷா ரவி "சீக் பார் ஜஸ்டிஸ்' எனும் தடை செய்யப்பட்ட அமைப்புடன் தொடர்பில் இருந்தார் என்பதற்கான ஆதாரம் ஏதும் இல்லை. விவசாயிகள் பேரணியின்போது நிகழ்ந்த வன்முறைக்கு பொறுப்பாக "டூல் கிட்'தான் இருந்தது என்பதைக் காட்டும் ஆதாரம் ஏதும் இல்லை என வாதிட்டார்.
 இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு திஷா ரவியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை செவ்வாய்க்கிழமைக்கு நீதிபதி ஒத்தி வைத்திருந்தார்.
 இந்நிலையில், தில்லி கூடுதல் செஷன்ஸ் நீதிபதி தர்மேந்தர் ரானா செவ்வாய்க்கிழமை திஷா ரவிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அதில் ரூ. 1 லட்சம் ஜாமீன் தொகையும், அதே தொகைக்கு இரு ஜாமீன் உத்தரவாதமும் அளித்து ஜாமீனில் செல்ல அனுமதிப்பதாக உத்தரவிட்டார்.
 முன்ஜாமீன் கோரி சாந்தனு மனு: இதனிடையே, "டூல் கிட்' விவகாரத்தில் நிகிதா ஜேக்கப், சாந்தனு ஆகிய இருவர் மீது பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
 "இவர்கள், "டூல் கிட்'டை உருவாக்குவதில் பங்களிப்பு செய்துள்ளதுடன், அந்த "டூல் கிட்'டை திருத்தும் பணிகளையும் செய்துள்ளனர். இவர்கள் வெளிநாடுகளில் செயல்படும் காலிஸ்தான் அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததும் தெரியவந்துள்ளது. இவர்கள் தலைமறைவாக உள்ளனர். இவர்களைக் கண்டுபிடிக்க மும்பை உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தியுள்ளது' என்று தில்லி போலீஸார் தெரிவித்திருந்தனர்.
 இந்நிலையில், பிப்ரவரி 16}ஆம் தேதி மும்பை உயர்நீதிமன்றம் சாந்தனு முலுக்குக்கு 10 நாள் டிரான்ஸிட் ஜாமீன் அளித்திருந்தது. இந்த ஜாமீனில் இருந்துவரும் சாந்தனு முலுக், தில்லி நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு புதன்கிழமை ல் விசாரணைக்கு வருகிறது.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments