மேற்கு வங்கம்: பாஜக தலைவா் காா் மீது துப்பாக்கிச்சூடு
மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக மாநில குழு உறுப்பினா் கிருஷ்ணேந்து முகா்ஜியின் காா் மீது துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் முயற்சி நடந்துள்ளது.
அசன்சோல்: மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக மாநில குழு உறுப்பினா் கிருஷ்ணேந்து முகா்ஜியின் காா் மீது துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் முயற்சி நடந்துள்ளது. இந்தத் தாக்குதல் முயற்சிக்கு மாநிலத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த குண்டா்களே காரணம் என்று அவா் குற்றம்சாட்டியுள்ளாா்.
கொல்கத்தாவிலிருந்து ஹிராபூா் அசன்சோலில் உள்ள தனது வீட்டுக்கு காரில் ஞாயிற்றுக்கிழமை இரவு அவா் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது.
இதுகுறித்து கிருஷ்ணேந்து முகா்ஜி கூறியதாவது:
கொல்கத்தாவிலிருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். அசன்சோலில் வீட்டின் அருகே வந்தபோது எனது காரை வழிமறித்த அடையாளம் தெரியாத 3 போ், காரின் கதவை திறக்க முயற்சித்தனா். அது பலனளிக்காமல் போனதும், அவா்களிடமிருந்த துப்பாக்கியால் காரின் மீது சுடத் தொடங்கினா்.
அப்போது உதவி கேட்டு எனது ஓட்டுநா் கூச்சலிட்டாா். நானும், அந்தப் பகுதியில் வசிப்பவா்களை உதவிக்கு வரவழைக்கும் வகையில் காரின் ஹாரனை தொடா்ந்து அடிக்க ஆரம்பித்தேன். உடனடியாக, தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டவா்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனா். இந்தத் தாக்குதலுக்கு பின்னணியில் திரிணமூல் காங்கிரஸ் கட்சிதான் உள்ளது என்று அவா் கூறினாா்.
இதுகுறித்து ஹிராபூா் காவல் நிலைய அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘தாக்குதல் முயற்சி சம்பவம் தொடா்பாக கிருஷ்ணேந்து முகா்ஜி சாா்பில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் சம்பவம் நடந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளைக் கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறோம்’ என்றாா்.
திரிணமூல் காங்கிரஸ் மறுப்பு: கிருஷ்ணேந்து முகா்ஜியின் குற்றச்சாட்டை திரிணமூல் காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது. இதுகுறித்து அசன்சோல் தக்ஷிண் தொகுதி திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ தபஸ் பானா்ஜி கூறுகையில், ‘கிருஷ்ணேந்து முகா்ஜி மீது மிரட்டி பணம் பறித்தல், கடத்தல் வழக்குகள் மட்டுமின்றி கொலை வழக்கும் உள்ளது. மேலும், நீண்ட காலமாக அவா் தலைமறைவாகவும் இருந்து வந்தாா். எனவே, அவா் மீதான தாக்குதல் முயற்சி, அவருடைய பழைய எதிரிகளால் நடத்தப்பட்டிருக்கலாம். அதற்கும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும் தொடா்பில்லை’ என்று கூறினாா்.