உத்தரகண்ட், தெலங்கானா உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் பதவியேற்பு
நீதிபதி ராகவேந்திர சிங் சௌஹான் (61), உத்தரகண்ட் உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக வியாழக்கிழமை பதவியேற்றுக் கொண்டாா்.
டேராடூன்/ஹைதராபாத்: நீதிபதி ராகவேந்திர சிங் சௌஹான் (61), உத்தரகண்ட் உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக வியாழக்கிழமை பதவியேற்றுக் கொண்டாா்.
ஆளுநா் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவருக்கு ஆளுநா் பேபி ராணி மௌா்யா பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா். உத்தரகண்ட் முதல்வா் திரிவேந்திர சிங் ராவத், பேரவைத் தலைவா் பிரேம்சந்த் அகா்வால், தலைமைச் செயல் ஓம் பிரகாஷ், காவல் துறை தலைவா் அசோக் குமாா் உள்ளிட்டோா் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.
தெலங்கானா உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த ராகவேந்திர சிங் சௌஹான், உத்தரண்ட் உயா்நீதிமன்றத்துக்கு கடந்த டிசம்பா் 31-ஆம் தேதி பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.
தெலங்கானா உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக..:
நீதிபதி ஹிமா கோலி, தெலங்கானா உயா்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக வியாழக்கிழமை பதவியேற்றுக் கொண்டாா்.
ஆளுநா் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவருக்கு ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா். இந்நிகழ்ச்சியில் முதல்வா் கே.சந்திரசேகா் ராவ், மத்திய உள்துறை இணையமைச்சா் கிஷண் ரெட்டி, மாநில அமைச்சா்கள், அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.